IPL 2026: “இதை ஜீரணிக்கவே முடியலை”.. உடைந்து போன ஸ்ரேயாஸ் ஐயர்.. 5 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் தோல்வி
தரம்சாலா: 2026 ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, தற்போது தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில், அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் முகத்தில் அந்த வலி அப்பட்டமாகத் தெரிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் வெற்றி கைநழுவிய பின், உடைந்த குரலில், "இதை ஜீரணிக்கவே முடியவில்லை" என அவர் பேசிய வார்த்தைகள் ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 25 நிலவரப்படி, முதல் 7 போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத அணியாக பஞ்சாப் அணி கெத்து காட்டியது. 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் கோலோச்சிய அந்த அணி, பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல இன்னும் 2 வெற்றிகள் மட்டுமே தேவை என்ற மிகச் சுலபமான நிலையில் இருந்தது. ஆனால், அடுத்த 19 நாட்களில் நிலைமை முற்றிலுமாக தலைகீழாக மாறியது. தொடர்ச்சியாக 5 தோல்விகளை அடுத்தடுத்து சந்தித்த பஞ்சாப் அணி, தற்போது புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு பரிதவித்து வருகிறது.

தரம்சாலாவில் நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை பஞ்சாப் எதிர்கொண்டது. பேட்டிங்கில் சற்று தடுமாறினாலும், அஸ்மதுல்லா ஓமர்சாய் அதிரடியால் பஞ்சாப் அணி 200 ரன்களைக் குவித்தது. இந்த இமாலய இலக்கை மும்பை அணி விரட்டியபோது, பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்தனர். போட்டியின் 18வது ஓவரில் மார்கோ ஜான்சென் 22 ரன்களை வாரி வழங்கியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல், கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில், சேவியர் பார்ட்லெட் பந்துவீச்சில் மும்பை அணி எளிதாக வெற்றியைப் பறித்தது.
மும்பை வீரர் திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். போட்டிக்குப் பின் சோகமாகப் பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "இந்த தோல்வியை நிச்சயமாக ஜீரணிக்கவே முடியவில்லை. இது இரு அணிகளும் கடுமையாகப் போராடிய மிகச்சிறந்த போட்டியாக அமைந்ததால் எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை. திலக் வர்மா மிகச் சிறப்பாக விளையாடினார்" எனத் தெரிவித்தார்.
பஞ்சாப் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் நடக்கும் முக்கியமான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பஞ்சாப் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு உறுதியாகும். இந்த மாபெரும் சவாலை ஸ்ரேயாஸ் ஐயர் படை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
