தோனி, கெயில் கிடையாது.. ஐபிஎல் வரலாற்றில் ஆல் டைம் சிறந்த வீரர் இவர் தான்.. அம்பத்தி ராயூடு புகழாரம்
மும்பை: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் நான்கு ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து இரு விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய பங்காற்றிய சுனில் நரைனே "எல்லா காலத்திலும் சிறந்த ஐபிஎல் வீரர்" என்பதில் தனக்கு சந்தேகமில்லை என்று அம்பதி ராயுடு கூறினார்.
நரைன் தனது 200வது ஐபிஎல் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு பேசிய ராயுடு, "பந்து, பேட் இரண்டிலும் அவர் ஒரு சரியான மேட்ச் வின்னர். ஐபிஎல்லில் பல ஜாம்பவான்கள் இருந்தாலும், நரைன் எப்போதும் தனித்துத் தெரிகிறார். எனக்கு அவர் முதன்மை இடத்தில் உள்ளார்," என்றார்.

அருகில் அமர்ந்திருந்த சஞ்சய் பங்கர், ராயுடுவைப் போல் உணர்ச்சிவசப்படவில்லை. எனினும், நரைனைத் தலைசிறந்த ஐபிஎல் வீரர்களில் தனது "டாப் ஐந்து" பட்டியலில் சேர்த்து, "லீக்கின் ஜாம்பவான்" என்று பாராட்டினார்.
"இந்த லீக்கில் பல ஜாம்பவான்கள் விளையாடியுள்ளனர். நீண்ட காலம் வுளையாடுவது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படும்," பங்கர் கூறினார். "நரைனின் பந்துவீச்சு முறை பலமுறை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. ஆனால், அவர் அதை எல்லாம் சமாளித்து, பந்தை இருபுறமும் திருப்பும் திறனுடன் அதே ஓவர்ஸ்பின் மூலம் பந்துவீச ஒரு புதிய வழியைக் கண்டறிந்துள்ளார்."
"இது பேட்டர்களின் மனதில் பெரும் சந்தேகத்தை விதைக்கிறது. இக்குணங்கள்தான் அவரை ஒரு லீக் ஜாம்பவானாக மாற்றுகிறது என்று நினைக்கிறேன்," என்றார் பங்கர்.ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில், யுஸ்வேந்திர சாஹல் (230), புவனேஷ்வர் குமார் (220) ஆகியோருக்கு அடுத்தபடியாக, சுனில் நரைன் 205 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
நரைன், ஐபிஎல்லில் அதிகப் போட்டிகளில் விளையாடிய வெளிநாட்டு வீரர் ஆவார். 2012 முதல் KKR அணிக்காக மட்டுமே ஆடுகிறார். KKR முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற அந்த ஆண்டில், அவர் 5.47 எக்கானமி ரேட்டில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2014 இல் KKR மீண்டும் கோப்பையை வென்றபோது, நரைன் 6.35 எக்கானமி ரேட்டில் 21 விக்கெட்டுகளுடன் கலக்கினார். 2024 இல் KKR மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றபோதும், அவர் 6.69 எக்கானமியில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த சீசனில் அவரது எக்கானமி 6.79 ஆக உள்ளது.
அனைத்து சீசன்களிலும் அவரது எக்கானமி ரேட் ஒரு ஓவருக்கு எட்டு ரன்களைத் தாண்டவில்லை. சனிக்கிழமை அவர் 7.25 எக்கானமியுடன் வீசியதை "சாதாரணமானது" என்று பங்கர் குறிப்பிட்டார்: "அவருக்கு இவை சாதாரண புள்ளிவிவரங்கள். அவர் அசாதாரணமாக எதையும் செய்யவில்லை, வழக்கமாகச் செய்ததைத்தான் செய்தார்."
நரைனைப் பற்றி ராயுடுவுடன் நிகழ்ச்சியல்லாத ஒரு விவாதத்தை பங்கர் நினைவுக்கூர்ந்தார். முன்னாள் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) பேட்டரான ராயுடு (12 சீசன்களில் மொத்தம் 175 போட்டிகளில் விளையாடினார்) நரைனை எதிர்கொள்ளும்போது அவரது வியூகம் என்னவாக இருந்திருக்கும் என்று பங்கர் கேட்டார்.
“நரைனுக்கு எதிராக தற்காப்புடன் விளையாடி, ஒன்று, இரண்டு ரன்கள் எடுப்பதே வழக்கம்,” ராயுடு சொன்னார். “ஆனால், அவரை ஸ்லாக்-ஸ்வீப் செய்ய முயன்றோ, ஆஃப் சைடில் பேக் ஃபுட்டில் ஆடியோ கூட, ஐபிஎல்லில் மற்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களைப் போல, நரைனை யாராலும் ஆதிக்கம் செலுத்தவே முடியவில்லை.”
“கடந்த 12-13 வருடங்களாக நரைன் ஐபிஎல்லில் (தனது 15வது ஆண்டில் உள்ளார்) ஆடும் நிலையில், எந்த ஒரு பேட்டரும் அவரை முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இது அவரது தனித்திறனை வெளிப்படுத்துகிறது,” என்று பங்கர் விளக்கினார்.
பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகில், ரஷித் கான் (சனிக்கிழமை 57 ரன்கள் கொடுத்து விக்கெட் இல்லை) போன்றோர் நிலையான ஆட்டத்திற்குச் சிரமப்படும்போது, நரைன் ஏன் எப்போதுமே வெற்றியுடன் திகழ்கிறார் என்பது பற்றிய தெளிவை ராயுடு வழங்கினார்.
“ரஷித் கானுக்கு ஒரு தனித்துவமான பிரச்சனை உள்ளது, குறிப்பாக இதுபோன்ற ஆடுகளங்களில், ஏனெனில் அவர் வீசுவது அனைத்தும் டாப்ஸ்பின் பந்துகள்,” ராயுடு விளக்கினார். “அத்தகைய பந்து ஆடுகளத்தில் விழுந்தவுடன், அது வேகமாக பேட்டிற்கு வரும். ஆனால் சுனில் நரைனின் பந்துகள் ஆடுகளத்தில் சற்று 'பிடித்து’ நிற்கும். இது எப்போதும் நிகழும். அவரது பந்து ஒருபோதும் மட்டைக்கு வழுக்கி வருவதில்லை.”
“ஆகவே, ஒரு பேட்ஸ்மேனாக, பந்து ஆடுகளத்தில் பிடித்து வருவதால், நரைன் போன்ற ஒருவருடைய பந்தை சரியாகக் கணிப்பது எப்போதும் கடினம். இதனால் பேட்டர்கள் பெரும்பாலும் தங்கள் ஷேப்பை இழக்க நேரிடும்,” என்று ராயுடு தனது கருத்தை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

