பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடருக்கான முதல் 20 போட்டிகளின் அட்டவணையை புதன் அன்று வெளியிட்டது பிசிசிஐ. நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது சொந்த ஊரான சின்னசாமி மைதானத்தில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அங்கு விளையாடுவதில் இன்னும் ஒரு சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட அனுமதி கிடைக்காமல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அங்கே காலடி எடுத்து வைக்க முடியாது என்பதே தற்போதைய நிலையாக உள்ளது.
கடந்த ஆண்டு பெங்களூரு அணி கோப்பையை வென்ற பிறகு நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிப் 11 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவத்தை அடுத்து, மைதானத்தின் பாதுகாப்பு குறித்துக் கர்நாடக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழு முழுமையான ஆய்வுகளை நடத்தி அறிக்கை அளித்த பிறகே சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்தப் பிசிசிஐ அனுமதி வழங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மைதானத்தின் பாதுகாப்பு வசதிகளை மதிப்பிடுவதற்காக நிபுணர் குழுவினர் மார்ச் 13ஆம் தேதி நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளனர். போட்டியின் போது கூட்டம் எப்படிக் கையாளப்படும் என்பதை அறிய ஒரு மாதிரி ஒத்திகையும் அங்கு நடத்தப்பட உள்ளது. மைதானத்தின் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகப் பதிமூன்று புதிய நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனி வழிகளும் இந்த முறை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் அட்டவணையின்படி மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியைச் சின்னசாமி மைதானத்தில் எதிர்கொள்கிறது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

நடப்பு சீசனில் பெங்களூரு அணி தனது சொந்த மண்ணில் ஐந்து போட்டிகளிலும், ராய்ப்பூரில் இரண்டு போட்டிகளிலும் விளையாட உள்ளது. பெங்களூரு ரசிகர்கள் மைதானத்திற்கு எளிதாக வந்து செல்ல ஏதுவாக, போட்டி நடைபெறும் நாட்களில் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச மெட்ரோ ரயில் பயண வசதியும் வழங்கப்பட உள்ளது. ஆனால், நிபுணர் குழுவின் ஒப்புதல் கிடைத்த பின்னரே சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெறுவது உறுதியாகும். அதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சின்னசாமி மைதானத்தில் ஆடுமா? என்ற கேள்வியுடன் ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர்