மும்பை: ஒவ்வொரு ஐபில் தொடருக்கு முன்பும் ஒவ்வொரு அணிக்குள் பல்வேறு சர்ச்சைகள் வெடித்து வருவது என்பது இயல்பான விஷயமாக மாறிவிட்டது. இப்படித்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.
அப்போது இப்படி தான் மும்பை அணியில் கடும் விரிசல்கள் ஏற்பட்டது. எனினும் அம்பானி குடும்பத்தினர் பெரும் அளவு போராடி விரிசலை சரி செய்தனர். இந்த நிலையில் ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பெரிய விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

அந்த அணியின் உள்ள வீரர்கள் மூன்று பிரிவுகளாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகிய மூன்று பேரும் கேப்டன் பதவிக்கு ஆசைப்படுவதாகவும், இதனால் ஏற்பட்ட குழப்பத்தால் ராகுல் டிராவிட் அணியை விட்டு விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தருணத்தில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது குறித்து எந்த ஒரு விவாதமும் நடத்தப்படவில்லை என சிஎஸ்கே தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியில் தொடர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் தான் அந்த அணியில் இருந்து விலகி சிஎஸ்கேவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
23 வயதான ஜெய்ஸ்வால் இதுவரை 67 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 216 ரன்கள் அடித்திருக்கின்றார். இதில் அவருடைய சராசரி 34 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் 152 என்ற அளவில் இருக்கிறது. இதில் இரண்டு சதம், 15 அரை சதம் அடங்கும். ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரராக விளங்கும் ஜெய்ஸ்வால், கடந்த ஆறு சீசன்களாக அந்த அணியின் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் அவர் சிஎஸ்கே அணிக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அணியை விட்டு வெளியேற ஜெய்ஸ்வால் கூறிவிட்டதாகவும், இதனால் ஏலத்திற்கு முன்பு அவர் விடுவிக்கப்பட்ட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இதன் மூலம் ஜெய்ஸ்வால் மினி ஏலத்தில் பங்கேற்க போகிறார் என தெரிகிறது.
ஜெய்ஸ்வால் மட்டும் மினி ஏலத்திற்கு வந்தால் அவரை தங்கள் அணிக்குள் கொண்டுவர சி எஸ் கே அணி முயற்சிக்கும். சிஎஸ்கே அணியில் ஏற்கனவே தொடக்க வீரர்களுக்கான இடம் பிரச்சனையில் இருப்பதால் ஜெய்ஸ்வாலை கொண்டுவர முயற்சி எடுக்கும். அப்படி மட்டும் நடந்தால் ஆயுஸ் மாத்ரே, ஜெய்ஸ்வால் என சிஎஸ்கே அணியின் பேட்டிங் தொடக்கம் மிரட்டலாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.