ஐபிஎல் 2027 எப்போது தொடங்கும்? பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா வெளியிட்ட முக்கிய தகவல்!
மும்பை: 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 20வது சீசன், கோடைகால வெயில் மற்றும் முன்கூட்டியே தொடங்கும் பருவமழையைத் தவிர்க்கும் பொருட்டு, முன்கூட்டியே தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2026 தொடர் மார்ச் 28 முதல் மே 31 வரை நடைபெற்றது.
இதில் பெங்களூரு அணி தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இருப்பினும், மே மாத இறுதியில் நிலவும் கடும் வெயில் மற்றும் முன்கூட்டியே தொடங்கும் பருவமழை காரணமாக போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. கடுமையான வெயில் காரணமாக விளையாட முடியாமல் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களது அதிருப்தியைப் பதிவு செய்தனர்.

இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா பேசுகையில், "மே 15ஆம் தேதிக்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு, சில மாநிலங்களில் பருவமழையும் தொடங்கிவிடுகிறது. இது மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கும், விளையாடும் வீரர்களுக்கும் உகந்தது அல்ல. எனவே, அடுத்த ஆண்டு ஐபிஎல் 2027 தொடரை மார்ச் 10ஆம் தேதி தொடங்கி, மே 15ஆம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் ஆளும் குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது" என்றார்.
போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பா?
ஐபிஎல் தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை 74ல் இருந்து 94 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கடந்த ஓராண்டாக தகவல் பரவி வரும் நிலையில், அது குறித்த கேள்விக்கு பதிலளித்த சைகியா, தற்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை என்றார்.
சர்வதேச கிரிக்கெட் அட்டவணை ஏற்கனவே மிகவும் நெரிசலாக இருப்பதால், ஐபிஎல் தொடருக்கு இரண்டு மாத கால அவகாசம் கிடைப்பதே கடினமாக உள்ளது. மற்ற நாடுகளின் இருதரப்பு போட்டிகளைக் கருத்தில் கொண்டு, உடனடியாக போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026 ஐபிஎல் தொடரின் போதே தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பெருமளவில் சரிவு ஏற்பட்டது. எனினும், ஜியோஸ்டார் ஸ்ட்ரீமிங் மூலம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததை சுட்டிக் காட்டி பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
ஆனால், சமூக வலைதளங்களிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த "ஐபிஎல் ஆர்வம்" இப்போது இல்லை என்பதை உணர முடிகிறது. இந்த நிலையில் தான் பிசிசிஐ ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்தவும், போட்டிகள் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இருக்கவும் திட்டமிட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications
