விசாகப்பட்டினம் : டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-ஐ நேரில் பார்த்த பின் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாரூக் கான் உரையாடிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது. இதன்பின் 273 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.2 ஓவர்களில் 166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் டெல்லி அணி தோல்வியடைந்தாலும் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 24 பந்துகளில் 25 பந்துகளில் 5 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 55 ரன்களை விளாசி தள்ளினார். இதனால் ரிஷப் பண்ட் தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்தப் போட்டி முடிவடைந்த பின் டெல்லி மற்றும் கேகேஆர் அணியின் வீரர்கள் மைதானத்தில் சில மணி நேரம் உரையாடினர். அப்போது மைதானத்திற்குள் வந்த ஷாரூ கான், கேகேஆர் மற்றும் டெல்லி அணியின் வீரர்களை சந்தித்து வாழ்த்து கூறினார். குறிப்பாக முன்னாள் கேகேஆர் வீரரான குல்தீப் யாதவை சந்தித்து உரையாடினார்.
இதன்பின் மைதானத்தில் அமர்ந்து ரிஷப் பண்ட் டெல்லி அணி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். ரிஷப் பண்டை பார்த்த ஷாரூக் கான், அவரை நோக்கி நடந்து வந்தார். ஷாரூக் கான் வருவதை அறிந்த ரிஷப் பண்ட், உடனடியாக எழுந்து சென்று அவரை கட்டிப்பிடித்து வரவேற்றார். இதனிடையே ரிஷப் பண்டை அமர்ந்திருக்குமாறு ஷாரூக் கான் அன்பை பொழிந்தார்.
இருவரும் சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக பேசினார்கள். இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், சுமார் 15 மாதங்களுக்கு பின் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளார். இதனை எதிரணி வீரர்கள் மற்றும் உரிமையாளர்கள் உட்பட அத்தனை பேரும் ரிஷப் பண்டை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.