பெங்களூர்: 8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கவுண்ட்டன் தொடங்க உள்ளது. ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பிப்ரவரி 16-ந்தேதி பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
8வது ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் 9-ந் தேதி தொடங்க உள்ளன. அதாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த பின்னர் 11 நாட்கள் கழித்து ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த ஐ.பி.எல். போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் பிப்ரவரி 16-ந் தேதி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட யுவராஜ்சிங்கை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏற்கனவே கழற்றி விட்டு விட்டது.
இதே போல் கெவின் பீட்டர்சன், தினேஷ் கார்த்திக், ராஸ் டெய்லர், முரளிவிஜய் உள்பட 14 பேரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி விடுவித்தது. இவர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகின்றனர்.
இதில் யுவராஜ்சிங், பீட்டர்சன், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தென்னாப்பிரிக்க டெஸ்ட் கேப்டன் அம்லாவின் தொடக்க விலையும் இது தான்.
இங்கிலாந்து கேப்டன் மோர்கன், இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான், இலங்கை கேப்டன் மேத்யூஸ், தில்ஷன், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி, வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் சாமுவேல்ஸ், ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் ஒயிட் ஆகியோரின் அடிப்படை விலை ரூ.1.5 கோடியாகும்.
இந்த வீரர்கள் ஏலம் நிகழ்ச்சியானது சோனி சிக்ஸ் ஹெச்.டி. மற்றும் சோனி சிக்ஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது. www.iplt20.com என்ற இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.