கொல்கத்தா: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
கொல்கத்தா ஈடன்காடன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற, இவ்விரு அணிகள் நடுவேயான போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணியில் உத்தப்பா 2 ரன்கள் எடுத்த நிலையில் அப்துல்லா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். இதன் பின்னர் கேப்டன் காம்பீருடன் இணைந்தார் மணீஷ் பாண்டே. இருவரும் நிதானமாக ஆடி ரன்ரேட்டை உயர்த்தினர்.
கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 183 ரன்கள் குவித்தது. காம்பீர் 34 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதேபோல் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மனீஷ் பாண்டே 35 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.
இறுதி ஓவர்களில் ரசல் (19 பந்துகளில் 39 ரன்களும்) மற்றும் அல் ஹசன் ஆகியோர் அதிரடி காட்டியதால் கொல்கத்தா 183 ரன்கள் எடுத்தது. பெங்களூர் தரப்பில் அரவிந்த் 2 விக்கெட்களையும், அப்துல்லா மற்றும் சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
பெங்களூர் அணி 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. கெய்லும், கோஹ்லியும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். இந்த ஐ.பி.எல். தொடரில் இதுவரை சரியாக ஆடாமல் ஏமாற்றம் அளித்து வந்த கெய்ல் இன்றைய போட்டியில் பார்முக்கு திரும்பினார்.
கெய்ல் 31 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து நரேன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து கோஹ்லியும் டி வில்லியர்சும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்கள் தடுமாறினார்கள்.
இறுதியில் பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி 51 பந்துகளில் 75 ரன்களும், டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் 59 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக விராட் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டார்.