டிஎன்பிஎல் வீரர் வருண்
வருண் சக்ரவர்த்தி காரைக்குடியை சேர்ந்தவர். பள்ளி கிரிக்கெட் அணியில் ஆடிய இவர், பின்னர் கிரிக்கெட் ஆடுவதை விட்டு விட்டார். பின்னர் ஆர்கிடெக்ட் படிப்பு முடித்த பின்னர் இரு ஆண்டுகள் வேலைக்கு சென்ற பின்னர் மீண்டும் கிரிக்கெட் ஆட துவங்கினார்.
வேகத்தில் இருந்து சுழலுக்கு மாறினார்
முதலில் வேகப் பந்துவீச்சாளராக இருந்த வருண் பின்னர் காயங்களால் பாதிக்கப்பட்டு சுழற்பந்துவீச்சாளராக மாறினார். கிளப் அணிகளில் ஆடி வந்த வருணுக்கு பின்னர் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளின் ஐபிஎல் வீரர்களுக்கு பயிற்சியில் பந்து வீசும் வாய்ப்பு கிட்டியது. அதன் மூலம் நல்ல அனுபவம் பெற்றார். பல்வேறு கடினமான காலங்களை கடந்து டிஎன்பிஎல்-இல் மதுரை பாந்தர்ஸ் அணியில் ஆடி கலக்கினார்.
மதுரை பாந்தர்ஸ் வெற்றியில் பங்கு
சென்ற ஆண்டு டிஎன்பிஎல் சீசனில் மதுரை அணி வெற்றி பெற்றதில் வருணின் பங்கு மிக அதிகம். 10 போட்டிகளில் 9 விக்கெட்கள் எடுத்த வருண் மிக மிக குறைந்த எகானமி ரேட் ஆக 4.70 வைத்திருந்தார். பவர்ப்ளே ஓவர்களில் இவரை சமாளிக்க முடியமால் பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.
கடும் போட்டி போட்ட அணிகள்
இவரை ஐபிஎல் ஏலத்தில் வாங்க ஐந்து அணிகள் கடுமையாக மோதின. டெல்லி கேபிடல்ஸ், சென்னை, பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய அணிகள் இவரை வாங்க ஏலம் கேட்டன. இறுதியில் பஞ்சாப் அணி 8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
பின் வாங்கிய சென்னை அணி
சென்னை அணி இரு வீரர்களை மட்டுமே வாங்க முடியும். 8.40 கோடி மட்டுமே செலவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. மோஹித் சர்மாவை 5 கோடிக்கு வாங்கிய சென்னை, வருணை 3.40 கோடி வரை ஏலம் கேட்டது. அதற்கு மேல் கேட்க பணம் இல்லாததால் பின் வாங்கியது.