துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2024 ஐபிஎல் மினி ஏலத்தில் தமிழக மாநில அணி வீரர் ஷாரூக் கானை வாங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், ஏலத்தில் உத்தரபிரதேச வீரரை வாங்க அதிக பணத்தை கொடுத்து விட்டதால் ஷாரூக் கானுக்கு சிஎஸ்கே அணி ஏலம் கேட்க முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஷாரூக் கான், ஒரு வேகப் பந்துவீச்சாளரும் கூட. கடந்த 2023 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது அணியை விட்டு நீக்கிய போதே அந்த அணி மீது கடும் விமர்சனம் எழுந்தது. மேலும், ஷாரூக் கானுக்கு ஐபிஎல் ஏலத்தில் பெரும் போட்டி இருக்கும் என பலரும் கூறினார்கள்.

அதே போல, ஷாரூக் கான் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்ட போது பஞ்சாப் கிங்ஸ் அணி - குஜாராத் டைட்டன்ஸ் அணிகள் போட்டி போட்டு விலை கேட்டன. இரு அணிகளும் விடாப்பிடியாக நின்றன. இறுதியில் குஜராத் அணி 7.40 கோடிக்கு ஷாரூக் கானை வாங்கியது.
குஜராத் அணிக்கு ஷாரூக் கான் சென்றதால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பொதுவாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதை தீர்க்க சரியான வீரர் கிடைத்தும் சிஎஸ்கே அணி கையில் பணம் இல்லாமல் அவரை வாங்கும் முடிவை கைவிட்டது.
முன்னதாக சமீர் ரிஸ்வி என்ற உத்தரபிரதேச வீரரை சிஎஸ்கே அணி போட்டி போட்டு வாங்கியது. அவருக்கு 8.40 கோடி விலை கொடுத்து வாங்கியது சிஎஸ்கே அணி. அதனால் கையிருப்பு 3.20 கோடியாக குறைந்தது. அதற்கும் முன் டேரில் மிட்செல்-ஐ 14 கோடிக்கும், ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடிக்கும் வாங்கி இருந்தது சிஎஸ்கே அணி.
ஷாரூக் கானை சிஎஸ்கே அணி வாங்காமல் போனதில் சிஎஸ்கே ரசிகர்கள் தான் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே சமயம், சமீர் ரிஸ்வி கிட்டத்தட்ட ஷாரூக் கான் போன்றே அதிரடி ஆட்டம் ஆடக் கூடியவர் என்பதால் சிஎஸ்கே அணிக்கு எந்த இழப்பும் இல்லை என்றே சொல்லலாம்.