துபாய் : 2024 ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிக அதிக விலை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மிக அதிக விலை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கும், பாட் கம்மின்ஸ் 20.50 கோடிக்கும் ஏலத்தில் வாங்கப்பட்டார்கள்.

இதன் பின்னணியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு திட்டத்தோடு தான் இப்படி செயல்படுகிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அஸ்வின், அனில் கும்ப்ளே போன்றோர் அது குறித்து மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கின்றனர். ரசிகர்கள் இது ஏமாற்று வேலை என விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் தொடரில் பொதுவாக இந்திய வீரர்களுக்கு தான் போட்டி அதிகமாக இருக்கும். வெளிநாட்டு வீரர்களில் சில நட்சத்திர வீரர்களுக்கு மட்டுமே பெரிய அளவில் விலை கிடைக்கும். ஆனால், இது மெகா ஏலத்தில் மட்டுமே. ஐபிஎல் மெகா ஏலம் என்பது மோந்ருஆந்டுகலுகு ஒரு முறை மட்டுமே நடைபெறும். அப்போது அனைத்து அணிகளும் மிகச் சில வீரர்களை மட்டும் தக்க வைத்து, மற்ற வீரர்களை நீக்கி விட்டு ஏலத்தில் புதிதாக வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.
ஒரு போட்டியில் ஒரு அணி அதிகபட்சம் நான்கு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். அதே போல அணியில் மொத்தம் எட்டு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். அதனால், மெகா ஏலத்தில் அணிகள் இந்திய நட்சத்திர வீரர்களை, திறமையான இளம் இந்திய வீரர்களை தேர்வு செய்வதில் கடும் போட்டி போடும். வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக பணம் செலவழிக்க முன் வர மாட்டார்கள்.
ஆனால், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தில் ஒவ்வொரு அணியும் அணியில் சில வீரர்களை மட்டுமே நீக்கி விட்டு சில வீரர்களை மட்டும் ஏலத்தில் தேர்வு செய்வார்கள். அப்போது கையில் அதிக பணம் இருக்கும் அணிகள் வெளிநாட்டு நட்சத்திர வீரர்களை வாங்குவார்கள்.
அதை ஆஸ்திரேலிய வீரர்கள் குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு மினி ஏலத்திலும் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மெகா ஏலத்தில் தங்கள் பெயர்களை கொடுக்க மாட்டார்கள். மாறாக மினி ஏலத்தில் தங்கள் பெயர்களை கொடுப்பார்கள். அப்போது வேகப் பந்துவீச்சாளர்கள் காயத்தால் சிக்கி இழந்த அணிகள், இவர்களை வாங்க முட்டி மோதும்.
2024 ஐபிஎல் மினி ஏலத்திலும் இதே தான் நடந்தது. வேக பந்துவீச்சாளர்கள் தேவை இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ்-ஐ 20 கோடிக்கும் அதிகமான தொகை கொடுத்து வாங்கின.
மெகா ஏலத்தில் நிறைய வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மத்தியில் இவர்களுக்கு 5 அல்லது 10 கோடிக்கும் குறைவான தொகையே கிடைத்து இருக்கும். ஆனால், அடுத்த ஆண்டு மெகா ஏலம் இருக்கும் நிலையில், தற்போது எந்த போட்டியும் இல்லாமல் எளிதாக 20 கோடிக்கும் மேல் பெற்று, ஒரே ஆண்டில், மூன்று ஆண்டுகளுக்கான வருமானத்தை பார்த்து விடுவார்கள். இதை சாமர்த்தியம் என்றும் சொல்லலாம். ஆனால், ரசிகர்கள் பலர் இதை ஏமாற்று வேலை என விமர்சனம் செய்து வருகின்றனர்.