மும்பை : 2024 ஐபிஎல் ஏலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அப்படி என்றால் மொபைலில் ஹாட் ஸ்டார் ஆப்-பில் தான் பார்க்க முடியும் என பலர் தவறாக நினைத்துக் கொண்டு உள்ளனர்.
இந்த முறை மொபைல் ஸ்ட்ரீமிங் ஒளிபரப்பில் ஒரு மாற்றம் உள்ளது. 2024 ஐபிஎல் ஏலம் டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், மொபைலில் ஜியோசினிமாவிலும் (JioCinema) ஒளிபரப்பாக உள்ளது. இன்று (டிசம்பர் 19) மதியம் 1 மணிக்கு ஏலம் தொடங்கும். ஏல ஒளிபரப்பு நண்பகல் 12 மணிக்கே தொடங்கி விடும்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் ஸ்டார் குழுமத்திடம் உள்ளது. அதே போல, ஐபிஎல் தொடரின் மொபைல் மற்றும் இணையதள ஸ்ட்ரீமிங் ஒளிபரப்பு உரிமம் ரிலையன்ஸ்-இன் ஜியோ குழுமத்திடம் உள்ளது.

அதனால், டிவியில் ஐபிஎல் ஏலத்தை பார்க்க நினைப்பவர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் பார்க்கலாம். தமிழ், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதே போல, மொபைல் ஸ்ட்ரீமிங் அல்லது இணையதளத்தில் பார்க்க நினைப்பவர்கள் ஜியோ சினிமா app அல்லது இணையதளத்தில் ஐபிஎல் ஏலத்தை பார்க்கலாம்.
இந்த ஏலத்தில் பத்து ஐபிஎல் அணிகளும் கலந்து கொள்ள உள்ளன. ஒவ்வொரு அணிக்கும் 100 கோடியில் இதுவரை வீரர்களை ஏலம் எடுக்க அல்லது மற்ற அணிகளுடன் இருந்து வாங்க செய்த செலவை தவிர்த்து தங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்துடன், கூடுதலாக 5 கோடி வழங்கப்படும். அந்த தொகையைக் கொண்டு அணிகள் ஏலத்தில் வீரர்களை வாங்கலாம்.
அதே போல 333 வீரர்கள் இந்த முறை ஏலத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் பல நட்சத்திர வீரர்களும் உள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் பல நட்சத்திர வீரர்கள் இந்த முறை ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். ஐபிஎல் அணிகள் அதிகபட்சம் 77 வீரர்கள் வரை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. அதில் 30 வெளிநாட்டு வீரர்களுக்கான இடமும் காலியாக உள்ளது.