துபாய் : 2024 ஐபிஎல் ஏலத்தை நடத்திய மல்லிகா சாகர் செய்த பெரிய தவறால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 லட்சத்தை இழந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஐபிஎல் ஏலத்தை முதன்முறையாக பெண் ஒருவர் நடத்துகிறார் என்ற பெருமையுடன் 2024 ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. மல்லிகா சாகர் சிறப்பாகவே ஏலத்தை நடத்தினார். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப்புக்கான ஏலத்தின் போது அவர் தவறு செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப் அடிப்படை விலையான 1 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்று இருந்தார். அவர் பெயர் அறிவிக்கப்பட்ட உடன் சிஎஸ்கே அணி விலை கோரியது. அதன் பின் டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் கோதாவில் இறங்கின.

ஒரு கட்டத்தில் லக்னோ அணி 6.40 கோடி என விலை கேட்ட போது பெங்களூர் அணி ஆலோசனை செய்ய சிறிது நேரம் எடுத்துக் கொண்டது. அதன் பின் பெங்களூர் அணி விலை கோரிய போது மல்லிகா 6.60 கோடி என விலை சொல்லி இருக்க வேண்டும். மாறாக அவர் 6.80 கோடி என விலை கூறினார். அதை யாரும் கவனிக்கவும் இல்லை.
இதை அடுத்து லக்னோ, பெங்களூர், சிஎஸ்கே அணிகள் இடையே போட்டி நீடித்தது. இறுதியில் பெங்களூர் அணி 11.50 கோடிக்கு அவரை ஏலத்தில் வாங்கியது. இதை குறிப்பிட்டு பெங்களூர் அணி ஏலத்தில் 20 லட்சத்தை இழந்து விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மல்லிகா அப்போது சரியாக 6.60 கோடியில் இருந்து விலையை தொடங்கி இருந்தால் இந்த இழப்பு ஏற்பட்டு இருக்காது எனவும் கூறி வருகின்றனர்.
அதே சமயம், ஒரு வீரரின் விலை 10 கோடியை தாண்டினால் அவரது விலை 50 லட்சங்களில் அதிகரிக்கும். அந்த வகையில் ஜோசப்பின் விலை 10 கோடியை தாண்டி விட்டதால் முன்பு அவரது விலையில் அதிகரித்த 20 லட்சத்திற்கு மதிப்பில்லை. எப்படி இருந்தாலும் 11.50 கோடி வரை அவருக்கு செலவு செய்ய பெங்களூர் அணி முடிவு செய்து விட்டது. அதனால் அந்த அணிக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை எனவும் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், மல்லிகா சாகர் தவறு செய்தார் என்பது உண்மைதான். எனினும், அதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.