துபாய் : 2024 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் கண்டு கொள்ளாமல் விற்கப்படாத வீரர்களில் ஒருவராக இருப்பார் என கருதப்பட்ட முகமது நபியை 1.50 கோடி கொடுத்து வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.
அதற்கு காரணம், அவர் ஐபிஎல் தொடரின் போது ரோஹித் சர்மாவுக்கு ஜோடியாக இம்பாக்ட் வீரராக ஆட வைக்கப்படுவார் என கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் வீரரான முகமது நபி சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் ஆவார். ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கானுக்கு எல்லாம் குரு என்றே சொல்லலாம். தற்போது 38 வயதாகும் முகமது நபியை ஐபிஎல் தொடரில் எந்த அணியும் வாங்காது என்றே கருதப்பட்டது. அவரது வயதின் காரணமாக அவரால் துடிப்பாக செயல்பட முடியாது என்ற கருத்து விமர்சகர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் அவரது அடிப்படை விலையான 1.50 கோடி கொடுத்து அவரை வாங்கியது. அது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. பல இளம் வீரர்கள் வந்த போது கூட அவர்களுக்கு சரியான விலை இல்லையெனக் கூறி மும்பை இந்தியன்ஸ் அணி புறக்கணித்து வந்தது. ஆனால், 38 வயதான வீரரை 1.50 கோடி கொடுத்து வாங்கியது ஏன்? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், இது குறித்து ஏலத்திற்கு பின் நடந்த விவாதத்தின் போது முகமது நபியை "இம்பாக்ட் பிளேயராக" மும்பை இந்தியன்ஸ் அணி பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஐபிஎல் தொடரின் இந்த இம்பாக்ட் பிளேயர் விதியின் மூலம் ஒரு வீரரை பவுலிங் அல்லது பேட்டிங்கில் மட்டும் ஆட வைக்கலாம்.
உதாரணத்துக்கு முகமது நபி நல்ல பவுலர் என்பதால் பேட்டிங்கின் அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை பேட்டிங் ஆட வைத்து விட்டு, பவுலிங்கில் முகமது நபியை பயன்படுத்தலாம். சமீபத்தில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மாவை இம்பாக்ட் வீரராக மும்பை இந்தியன்ஸ் அணி பயன்படுத்தும் என கூறப்படும் நிலையில், அவரை பவுலிங்கின் போது பயன்படுத்தாது. அப்போது ரோஹித் சர்மாவை வெளியே அமரவைத்து விட்டு, முகமது நபியை பவுலிங்கின் போது பயன்படுத்தக் கூடும்.