மும்பை : ரோஹித் சர்மா ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் அந்த அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், அந்த அணியின் சார்பாக அவர்களை எச்சரிக்கும் விதமாக ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.
சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பத்து ஆண்டுகள் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தனர். அந்த மாற்றத்தை அந்த அணியின் ரசிகர்கள் விரும்பவில்லை.

சமூக ஊடகங்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அலை உருவாகி, பல பொதுவான மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மற்றும் ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை பின்தொடர்வதில் இருந்து பின்வாங்கி (Unfollow) வருகின்றனர்.
மேலும், சில ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா விசுவாசமாக இல்லை எனவும், அவர் 2022 ஐபிஎல் தொடரின் போது கேப்டன் பதவிக்காக குஜராத் அணிக்கு சென்று விட்டு தற்போது மீண்டும் மும்பை அணிக்கு திரும்பி இருப்பதையும் சுட்டிக் காட்டி கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். ஆனால், பல ரசிகர்கள் பொதுவாக மும்பை இந்தியன்ஸ் அணியின் முடிவை விமர்சனம் செய்தே கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாண்டியா குடும்பத்தினரை எல்லாம் விமர்சனம் செய்து வெளியிடப்பட்ட கருத்துக்களை மட்டும் சுட்டிக் காட்டி இது போன்ற சமூக ஊடக நடவடிக்கைகளை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என மும்பை இந்தியன்ஸ் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பங்கேற்று வரும் குழுவை சேர்ந்த ஒருவர் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அவர் கையை கும்பிட்டு கேட்டாலும் பேசுவது என்னவோ மிரட்டுவது போலத் தான் உள்ளது.
ரோஹித் சர்மா ரசிகர்களை இத்துடன் இந்த விமர்சனம், கேலி, கிண்டல்களை எல்லாம் நிறுத்த வேண்டும் என மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது என்று இதை எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், இதுவரை 10 லட்சம் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் மும்பை இந்தியன்ஸ் இழந்துள்ளது.