துபாய் : 2024 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பார்த்ததை விட குறைந்த பணம் கொடுத்து நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவை வாங்கியது.
ரச்சின் ரவீந்திரா இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். 2023 உலகக்கோப்பை தொடரில் மிக இளம் வயதில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பெற்றவர். சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் பேட்டிங் உத்தியான முதலில் நிதான ஆட்டம் ஆடத் துவங்கி பின் வேகம் எடுக்கும் ஆட்டத்தை இயல்பாகவே கொண்டவர்.

அதனால், சிஎஸ்கே அணி ரச்சின் ரவீந்திராவை வாங்கும் என முன்பிருந்தே கணிப்புகள் இருந்தன. அதே சமயம், பெங்களூர் வீரர் என்பதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் அவரை வாங்க போட்டி போடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதிர்பாராவிதமாக பெங்களூர் அணி அவரை ஏலத்தில் விலை கேட்கவே இல்லை.
மாறாக டெல்லி கேபிடல்ஸ் - சிஎஸ்கே அணிகள் ஏலத்தில் ரவீந்திராவை வாங்க போட்டி போட்டன. டெல்லி பெரிய அளவில் போட்டி போடவில்லை. அதனால் ரவீந்திராவின் அடிப்படை விலையான 50 லட்சத்தில் இருந்து 1.80 கோடியுடன் அவருக்கான ஏலம் முடிவுக்கு வந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கு வாங்கியது. சிஎஸ்கே அணி போட்டி போட்டு இவரை வாங்க முக்கிய காரணம், இவர் பேட்டிங் செய்வதோடு, ஆஃப் ஸ்பின் பவுலிங்கும் போடுவார். அதன் காரணமாகவே சிஎஸ்கே அணி போட்டி போட்டு இவரை வாங்கியது.
சென்னை சேப்பாக்கம் அணி எப்போதுமே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் ஆகும். அங்கே சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ஆஃப் - ஸ்பின்னர்களை அதிக அளவில் பயன்படுத்துவார். அதன் காரணமாக ரச்சின் ரவீந்திராவை அந்த அணி வாங்கி உள்ளது. ஆனால், பெரிய போட்டி இல்லாமல் வெறும் 1.80 கோடிக்கு ரச்சினை சிஎஸ்கே அணி வாங்கியது ஒரு ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். மற்றொரு நியூசிலாந்து அதிரடி வீரர் டேரில் மிட்செல்லையும் சிஎஸ்கே அணி வாங்கி இருக்கிறது. அவரை 14 கோடிக்கு வாங்கி இருக்கிறது சிஎஸ்கே அணி.