துபாய் : 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நாயகனான ஆஸ்திரேலிய அதிரடி துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட்டை வாங்க சிஎஸ்கே அணி கடும் போட்டி போட்டது.
ஆனால், இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தானே முன் நின்று ஏலத்தில் அவரை போட்டி போட்டு வாங்கினார்.
2024 ஐபிஎல் ஏலம் துபாயில் நடைபெற்றது. அதில் முதல் பிரிவில் உலகின் முன்னணி அதிரடி துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட்டுக்கு ஏலத்தில் சில அணிகளே போட்டி போட்டன. ஏற்கனவே, அணியில் 3 - 4 துவக்க வீரர்களை வைத்திருந்த அணிகள் அவரை வாங்க முன்வரவில்லை.

ஆனால், சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் ட்ராவிஸ் ஹெட்டை வாங்க முட்டி மோதின. ஒரு கட்டத்தில் 6 கோடிக்கு மேல் அவர் விலை சென்ற உடன் சிஎஸ்கே அணி தயங்கியது. இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6.80 கோடிக்கு அவரை வாங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை வாங்கினால் ஆல் - ரவுண்டராக பயன்படுத்த வாய்ப்பு இருந்தது. ஆனால், அதிக விலை போனதால் சிஎஸ்கே அணி பின் வாங்கியது. சன்ரைசர்ஸ் அணி முன்னதாக டேவிட் வார்னரை துவக்க வீராரக வைத்திருந்தது. எனினும், கடந்த முறை அவரை அணியில் இருந்து நீக்கி இருந்தது. அந்த இடத்தை நிரப்பவே ட்ராவிஸ் ஹெட்டை வாங்கி இருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். எதிர்காலத்தில் அவர் அந்த அணியின் கேப்டனாக கூட ஆகலாம்.
மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்-ஐ 20.50 கோடிக்கு வாங்கி மிரட்டியது. அப்போதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி போட்டி போட்டது. அதனால் விலை ஏறவே 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி அவரை வாங்கியது. மறுபுறம் சிஎஸ்கே அணி டேரில் மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரை வாங்கியது.
இந்த ஏலத்தில் பொதுவாக பார்க்கும் போது சன்ரைசர்ஸ் அணி ஆஸ்திரேலிய வீரர்களை நோக்கி நகர்ந்து இருக்கிறது. அதே சமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நியூசிலாந்து வீரர்களை நோக்கி நகர்ந்துள்ளது. பெங்களூர் அணிக்கு அதிக வேகப் பந்துவீச்சாளர்கள் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால், எந்த வேகப் பந்துவீச்சாளர் ஏலத்துக்கு வந்தாலும் அந்த அணி விலை கேட்கத் துவங்கியது.