மும்பை: அடுத்த 3 ஆண்டுகளில் ஐபிஎல் தொடர் எந்த தேதியில் தொடங்கப்பட்டு, எந்த தேதியில் முடிக்கப்படும் என்ற விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக அடுத்த 3 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரின் போது வேறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை திட்டமிடவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎம் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் 2 நாட்களில் ஜெடா நகரில் நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் தயாராகி வருகின்றனர். கடைசி நேரத்தில் கேப்டன், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இதுவே கடைசி மெகா ஏலமாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இதனால் பல்வேறு அணிகளின் நிர்வாகங்களும் சாம்பியன் கோப்பையை வெல்வதற்கான அணியை கட்டமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க மொத்தமாக 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். 1,165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் பதிவு செய்திருந்த நிலையில், மெகா ஏலத்தில் பங்கேற்கும் இறுதிப் பட்டியலில் 574 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதில் மொத்தமாக 366 இந்திய வீரர்களும், 208 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். அன்கேப்ட் வீரர்களில் 318 இந்திய வீரர்களும், 12 வெளிநாட்டு வீரர்களும் தேர்வாகியுள்ளனர். இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் இன்று காலை அனைத்து அணிகளுக்கும் முக்கியமான தகவல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி, இறுதிப்போட்டி நடக்கும் தேதியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக வெளிநாட்டு வீரர்களுக்கு முன்கூட்டியே ஐபிஎல் அட்டவணை தொடர்பாக தகவல் பரிமாற முடியும். அந்த நேரத்தில் வேறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இருந்தால், அதில் பங்கேற்பது குறித்து ஐபிஎல் நிர்வாகத்திடம் சம்பந்தப்பட்ட வீரர்கள் தகவல் கொடுக்க முடியும். இதன்படி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 14ஆம் தேதி தொடங்கப்பட்டு மே 25 தேதியுடன் முடிவடைய உள்ளது.
அதேபோல் 2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 15ஆம் தேதி தொடங்கப்பட்டு மே 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து 2027ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 14ல் தொடங்கப்பட்டு மே 30ஆம் தேதி இறுதிப்போட்டியுடன் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வரை ஐபிஎல் தொடருக்கான அட்டவணைக்காக கடைசி நிமிடம் வரை அந்தந்த அணி நிர்வாகங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் வரும். ஏனென்றால் வெளிநாட்டு வீரர்களின் பயணத்தை திட்டமிட அணி நிர்வாகங்கள் சில சிரமங்களை சந்தித்தன. இனி அந்த கவலை இருக்காது. இந்த செயல் மூலமாக ஐபிஎல் தொடரை கிட்டத்தட்ட ஐசிசி அட்டவணையில் இணைத்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.