சென்னை: ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் உள்ளிட்டோர் சென்னை வந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் நிர்வாகிகளுடன் அவர்கள் ஆலோசித்து வருவது தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கியுள்ள நிலையில், சிஎஸ்கே அணி தரப்பில் எந்தெந்த வீரர்களை வாங்கலாம் என்பது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்முறை ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, சிவம் துபே, பதிரானா மற்றும் தோனி ஆகியோர் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ரூ.55 கோடியுடன் சிஎஸ்கே அணி மெகா ஏலத்தை சந்திக்க உள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகத்தை பொறுத்தவரை அனைத்து முடிவுகளையும் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் ஆகியோர் இணைந்து தான் எடுத்து வந்தனர். இவர்களுக்கு ஆலோசனை கூறுவதற்காக மட்டுமே சிஎஸ்கே அணியின் நிர்வாகிகள் காசி விஸ்வநாதன், சிஓஓ சுந்தர் ராமன் உள்ளிட்டோர் இருந்தனர். அதேபோல் சில திறமையான உள்ளூர் வீரர்களையும் அவர்களுக்கு அடையாளம் காட்டுவர்.
ஆனால் மெகா ஏலத்தின் டேபிளில் சுந்தர் ராமன் மற்றும் காசி விஸ்வநாதன் ஆகியோர் தோனியின் ஆலோசனையுடன் பல்வேறு முடிவுகளை எடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சீசனிற்கு முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் காரணமாக இந்த மெகா ஏலத்திற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்க ருதுராஜ் கெய்க்வாட் நேற்றிரவு சென்னை வந்தார்.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்திற்கு பின் மும்பை வந்து இறங்கிய அவர், அடுத்த நாளே சென்னை வந்தது தெரிய வந்தது. அதேபோல் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கும் சென்னை வந்துள்ளார். இந்த நிலையில் கேப்டன் ருதுராஜ் மற்றும் ஃபிளெமிங் இருவரும் மெகா ஏலம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலமாக ஒரு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்-க்கு முழு அதிகாரமும் சிஎஸ்கே அணி நிர்வாகம் வழங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சீசனில் தோனியின் தலையீடு இல்லாமல் ருதுராஜ் கெய்க்வாட் நினைத்ததை போன்ற ஒரு அணியை கட்டமைக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முயன்று வருவதாகவும் பார்க்கப்படுகிறது. இவருக்கு உதவி செய்ய சிஎஸ்கே அணி நிர்வாகிகள் இருப்பதால், இம்முறை எப்படியான வீரர்களை சென்னை அணி வாங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.