மும்பை : ஐபிஎல் மெகா ஏலத்தில் பல மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் போனதை நினைத்து மிகவும் ஏமாற்றமாக இருப்பதாக அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவித்து இருக்கிறார்.
ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் 8 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆகாஷ் அம்பானி, ஷாருக்கான், காவியா மாறன் போன்ற அணி உரிமையாளர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

ஆனால் மெகா ஏலம் நடத்த வேண்டும் என்பதற்காக பிசிசிஐ இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. மும்பை அணி பலமான வீரர்களை தேர்வு செய்து அணியை கட்டமைத்திருக்கிறது. எனினும் மும்பை அணியில் மெயின் 12 வீரர்கள் சிறப்பாக இருந்தாலும், பெஞ்சில் போதிய வீரர்கள் இல்லை என்ற ஒரு குறை இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மும்பை அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி, மெகா ஏலத்தில் நாங்கள் எடுத்த வீரர்கள் நினைத்து திருப்தி அடைகிறேன். தற்போது மும்பை அணி பலமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எனினும் பல முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் போனதை நினைத்து ஏமாற்றமாக இருக்கின்றது.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு நல்ல அணியை கட்டமைத்து வெற்றி பாதைக்கு திரும்பும் நேரத்தில் தற்போது மெகா ஏலம் நடைபெற்று இருக்கிறது. டி20 என தனி திறமை இருக்கும் வீரர்கள் ஒவ்வொரு அணிக்கும் தேவை. அப்படிப்பட்ட எங்கள் அணியின் முன்னாள் வீரர்களை நாங்கள் மீண்டும் ஏலத்தில் எடுக்க முடியாமல் போய்விட்டது.
இதை அடுத்து, எனக்கு மிகப்பெரிய வருத்தம் தான். எனினும் புதிய அணிக்கு சென்றுள்ள எங்களின் வீரர்கள் சிறப்பாக செயல்பட நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஏலத்திற்கு முன்பே மும்பை அணி, ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், பும்ரா, திலக் வர்மா போன்ற ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் அல்லாமல் மெகா ஏலம் மூலம் முன்னாள் சிஎஸ்கே வீரர் தீபக்சாகர், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் பவுல்ட், முன்னாள் ஆர்சிபி வீரர் வில் ஜேக்ஸ் போன்ற பலமான வீரர்களை வாங்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.