அபுதாபி: 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் அபுதாபியில் இன்று அதாவது டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு கேமரூன் கிரீன் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவரை கொல்கத்தா அணி ரூபாய் 25.20 கோடிகளுக்கு வாங்கியது. இப்படி இருக்கும்போது இலங்கையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரானாவை கொல்கத்தா அணி வாங்கி உள்ளது.
மதிஷா பத்திரானா இலங்கையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர். இவரை இலங்கை அணி அவர்களின் அணியில் சேர்த்துக் கொள்வதற்கு முன்பாகவே, அடையாளம் கண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அழைத்து வந்தவர் தல தோனி தான். சென்னை அணியில் கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார். கடந்த சீசன் வரை இவர் 32 போட்டிகள் விளையாடி உள்ளார். இதில் மொத்தம் 47 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். இவரது பவுலிங் பெஸ்ட் என்றால் அது ஒரு போட்டியில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியது தான்.

பத்திரனா: சென்னை அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என்றாலே பத்திரனாவின் பந்து வீச்சினை 10 ஓவரில் இருந்து 20வது ஓவருக்குள் எதிர்கொண்டே ஆகவேண்டும் என்ற மனநிலையில் தான் கடந்த சீசன் வரை மற்ற அணிகள் திட்டங்களை வகுத்து இருக்கும். 2026 சீசனில் இந்த திட்டத்தை சென்னை அணியும் வகுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தல தோனி: பத்திரனாவை வாங்க சென்னை அணி முயற்சி செய்தாலும், அது கை கூடவில்லை. இந்த ஏலத்திலேயே அதிக தொகையுடன் களமிறங்கிய கொல்கத்தா அணி பத்திரனாவை ரூபாய் 18 கோடிகளுக்கு வாங்கி உள்ளது. இது சென்னை அணி ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை அளித்தாலும் கொல்கத்தா அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏற்கனவே, கேமரூன் கிரீனை ரூபாய் 25.20 கோடிகளுக்கு வாங்கி மிரட்டி விட்ட கொல்கத்தா அணி தற்போது பத்திரனாவையும் ரூபாய் 18 கோடிகளுக்கு வாங்கி உள்ளது. இதில் ஐபிஎல் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருப்பது, டெத் ஓவரில் தோனிக்கு எதிராக பத்திரனா பந்து வீசுவது பற்றித்தான். இப்போதே பலரும் இதை நினைத்து ஃபயர் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.