சென்னை: சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்த நிலையில், அவரை ரூ.7.6 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
சூதாட்ட புகாரால், சிஎஸ்கே அணி கடந்த 2 வருட ஐபிஎல் தொடர்களில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தடைநீங்கியதால் இந்த வருடம் அந்த அணி களமிறங்க உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு பதிலாக உருவாக்கப்பட்ட புனே மற்றும் குஜராத் அணிகள் கலைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், டோணி மீண்டும் சிஎஸ்கே அணிக்கே திரும்புவாரா என்ற கேள்வி சென்னை ரசிகர்கள் மனதில் தீயாய் கனன்று வந்தது. வீரர்களை தேர்ந்தெடுக்க நடைபெறும் ஏலத்தின்போது, டோணியை வேறு அணி எடுக்க வாய்ப்புள்ளதே என்ற கேள்வி ரசிகர்களை துரத்தியது.
அதற்கு சில மாதங்கள் முன்பே விடை கிடைத்துவிட்டது. டோணி சென்னை அணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ஐபிஎல் நிர்வாக கவுன்சில் அறிவிப்புபடி, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் 2 வருடங்கள் முன்பாக தங்கள் அணிக்காக ஆடியதில் அதிகபட்சமாக 5 வீரர்களை ஏலம் இன்றியே தக்க வைத்துக்கொள்ள முடியும். ரெய்னா, மெக்கல்லம், பிராவோ, ஜடேஜா ஆகியோரையும் சிஎஸ்கே தக்க வைக்கும் என தெரிகிறது.
ஏலத்தில் அஸ்வினை சிஎஸ்கே அணி எடுக்குமா இல்லையா என்பது தெரியாமல் இருந்தது. அஸ்வின் சென்னை அணிக்கு வந்தால்தான் களைகட்டும் என்பதால் ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், சிஎஸ்கே அணியோ, அஸ்வினை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. ரூ.2 கோடி அடிப்படை மதிப்பு கொண்ட அஸ்வினை ரூ.7.6 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. ராஜஸ்தான் அணியும், அஸ்வினை வாங்குவதற்கு போட்டி போட்டது.