ஐபிஎல் ஏலம் இலங்கை வீரர்களுக்கு ஒரு பாடம்.... ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஜெயவர்தனே
சென்னை: ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வீரர்களின் பின்னடைவு குறித்து முன்னாள் வீரர் ஜெயவர்தனே ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் பல்வேறு திருப்பங்களுடன் நடந்து முடிந்தது.
இந்நிலையில் இலங்கை அணி வீரர்கள் ஒருவர் கூட ஏலத்தில் எடுக்கப்படாதது குறித்து முன்னாள் வீரர் ஜெயவர்தனே ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை வீரர்கள்
ஐபிஎல் தொடரில் அயல் நாட்டு வீரர்களின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் இலங்கை வீரர்களான மலிங்கா, ஜெயவர்தனே, சங்ககாரா ஆகியோர் நட்சத்திர வீரர்களாக இருந்தனர். ஆனால் அவர்களின் ஓய்வு பின்னர் எந்த இலங்கை வீரரும் சோபிக்கவில்லை.

2021 ஏலம்
2021 மினி ஏலத்தில் இலங்கை வீரர் இசுரு உடானா ஆர்.சி.பி அணியால் கழட்டிவிடப்பட்டார். இதனையடுத்து அவருடன் சேர்த்து திஷாரா பெராரா, குசல் பெரரா ஆகியோர் ஏலத்தில் விடப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது எந்த அணியும் கவனம் செலுத்தவில்லை.

ஆதங்கம்
இது குறித்து பேசியுள்ள மகிலா ஜெயவர்தனே, ஐபிஎல்-ல் இலங்கை வீரர்கள் ஏலத்தில் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. இலங்கை வீரர்கள் இதில் இருந்து பாடம் கற்க வேண்டும். அவர்கள் விழித்துக்கொண்டு ஐபிஎல் போன்ற பெரும் தொடர்களில் பங்கேற்க தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சிக்கல்
ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் பெரும்பாலும் அயல்நாடுகளில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றனர். ஆனால் இலங்கையில் அதற்கு சிறிய பற்றாக்குறை உள்ளது என ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

ஒருவர் கூட இல்லை
ஒரு இலங்கை வீரர் கூட ஏலம் போகாததால் இலங்கை வீரர்கள் இல்லாத ஐபிஎல் போட்டியாக இந்தாண்டு நடைபெறவுள்ளது. ஆனால் இலங்கை அணி ஜாம்பவான்களான ஜெயவர்தனே மும்பை அணியின் பயிற்சியாளராகவும், சங்காரா ராஜஸ்தான் அணி இயக்குநராகவும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications