ஐபிஎல் சூதாட்ட தடை: “அதிர்ச்சியும், ஏமாற்றமுமாக உள்ளது” - டுவிட்டரில் ராஜ் குந்த்ரா புலம்பல்
டெல்லி: ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோருக்குக் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான விவகாரங்களில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இது தனக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளதாக ஷில்பா ஷெட்டியின் கணவரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளருமான ராஜ் குந்த்ரா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின் 6 ஆவது கிரிக்கெட் தொடரில் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சென்னை அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது.

விசாரணைக் குழு அறிக்கை:
மேலும், குருநாத் மெய்யப்பனின் மாமனார் என்.சீனிவாசன், பிசிசிஐ அமைப்பில் எந்தவிதமான பதவியையும் வகிக்கக் கூடாது என்றும், சூதாட்டம் தொடர்பாக விசாரணைக் குழு 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் என்.சீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவியை இழந்தார்.

சூதாட்ட புகாரில் அணிகள்:
தற்போது, லோதா தலைமையிலான விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

முறையற்ற பெட்டிங்:
இதுகுறித்த லோதா குழுவின் அறிக்கையில், "குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரியாகச் செயல்பட்டார். அவர் அதிகமுறை பெட்டிங்கில் ஈடுபட்டார். இந்திய சட்டப்படி சூதாட்டம் மிகப்பெரிய குற்றம். குந்த்ரா மீது சூதாட்டப் புகார் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரபலமான சூதாட்டத் தரகர் மூலமாக குந்த்ரா அடிக்கடி பெட்டிங் செய்துள்ளார்.

மாண்பைக் குறைத்தவர்கள்:
இதன்மூலம் ராஜஸ்தான் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. சென்னை, ராஜஸ்தான் அணிகளின் நிர்வாகிகளான குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா பெட்டிங்கில் ஈடுபட்டதன் மூலம் விளையாட்டின் மாண்பை குறைத்துவிட்டார்கள். வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோருக்குத் தடை விதிக்கப்படுகிறது.

டுவிட்டரில் புலம்பல்:
இத்தண்டனை விவரம் குறித்து ராஜ் குந்த்ரா வெளியிட்ட "டுவிட்டர்" செய்தியில், "பல்வேறு குழப்பான நிலை நிலவி வருகின்றது. தீர்ப்பின் முழு விவரத்தை பார்க்க, தீர்ப்பின் நகலுக்காக கேட்டிருக்கின்றேன். இந்த தீர்ப்பு மிகவும் அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications