மும்பை: ஐபிஎல் அணிகள் குறித்த அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு கூறி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி கூறுகையில், நேற்று முன்தினம் புதிதாக இணைந்த 2 அணிகளின் விவரங்களை மட்டும் வருமான வரித்துறையினர் கேட்டிருந்தனர். அந்த அணிகளின் பங்குதாரர்கள், முகவரிகள், வீரர்கள் ஏல விவரம், ஏல முறை உள்ளிட்டவை குறித்த தகவல்களைக் கேட்டிருந்தனர்.
தற்போது மீதமுள்ள 8 அணிகளின் முழு விவரங்களையும் வருமான வரித்துறை கேட்டுள்ளது.
ஏப்ரல் 23ம் தேதி கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐபிஎல் தலைவர் லலித் மோடி .அல்லது அதன் தலைமை செயலதிகாரி சுந்தர்ராமன் ஆகியோரில் ஒருவர் நேரில் ஆஜராகி கேட்டுள்ள தகவல்களைத் தெரிவிப்பார்கள் என்றார்.
ஐபிஎல் அமைப்பின் ஒட்டுமொத்த கட்டமைப்பு மற்றும் நிதி விவகாரங்களை வருமான வரித்துறை அலசி ஆராயவுள்ளதையே இந்த சம்மன் தெளிவுபடுத்துகிறது.