சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தப் போட்டியை வென்றால் சிஎஸ்கே அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுவதோடு, புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறும்.
சிஎஸ்கே அணியில் தற்போது பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை வீரர் மகீஷ் தீக்சனா இன்று களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனியின் ஃபேவரைட் என்பதால், அவருக்கு நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும்.

ஆனால், தீக்சனா வந்தால் யாருடைய இடத்திற்கு ஆபத்து என்ற ஒரு சந்தேகமும் எழுந்துள்ளது. மும்பைக்கு எதிராக மோயின் அலி களமிறங்காத நிலையில், இன்றைய ஆட்டத்தில் அவர் இடம்பெறுவார். இந்த நிலையில் மிட்செல் சாண்ட்னரும் நல்ல பார்மில் இருந்து, சிஎஸ்கேக்கு வெற்றியை தேடி தந்துள்ளார், இதனால் அவரை நீக்குவதும் சரியாக இருக்காது.
இதனால் தொடக்க வீரர் கான்வேவை நீக்கிவிட்டு, மும்பைக்கு எதிராக அதிரடியாக விளையாடிய ரஹானேவை களமிறக்கலாமா அல்லது, தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் பிரிட்டோரியசை நீக்கிவிட்டு தீக்சனாவை சேர்க்கலாமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர் இல்லாத நிலையில், வெளிநாட்டு பவுலர்களை நம்பி தான் களமிறங்க வேண்டியது உள்ளது. இதனால் யாரை சேர்ப்பது, யாரை நீக்குவது என்ற குழப்பம் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதில் நல்ல வேளையாக ஸ்டோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி அவரும் இருந்தால், பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் பெரும் தலைவலி ஏற்படலாம்.
சிஎஸ்கே உத்தேச அணி xi - 1, ருதுராஜ் கெய்க்வாட், 2, ரஹானே, 3, மோயின் அலி, 4, அம்பத்தி ராயுடு, 5, சிவம் துபே, 6, தோனி, 7, ஜடேஜா, 8, மிட்செல் சாண்ட்னர், 9, மகீஷ் தீக்சனா, 10, தேஷ்பாண்டே 11, சிசாண்டா மகாலா/ பிரிட்டோரியஸ். இம்பேக்ட் பிளேயர் - ஹங்கர்கேகர்