மும்பை: 2025 ஐபிஎல் வணிக மதிப்பீடு புதிய உச்சத்தை எட்டி உள்ளது. ஹூலிஹான் லோக்கி (Houlihan Lokey) என்ற நிறுவனம் நடத்திய விரிவான மதிப்பீட்டு ஆய்வின்படி, ஐபிஎல்-லின் வணிக மதிப்பு 16.1% அதிகரித்து, தற்போது ₹1,56,568 கோடியாக (US$18.5 பில்லியன்) உயர்ந்து, ஒரு புதிய சாதனையை எட்டியுள்ளது. 2024-ல் ஐபிஎல் தொடரின் வணிக மதிப்பு ₹1.34 லட்சம் கோடியாக இருந்தது. வியக்கத்தக்க வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மதிப்பு, மற்ற முன்னணி அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவற்றை முந்தி இருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்கான ஐபிஎல்-லின் தனிப்பட்ட பிராண்ட் மதிப்பும் 16.1% உயர்ந்து, ₹32,721 கோடியாக (US$3.9 பில்லியன்) அதிகரித்துள்ளது. இது ஐபிஎல்-லின் விரிவடையும் வணிகத்தடம், ஒப்பிட முடியாத ரசிகர் ஈடுபாடு மற்றும் அதிகரித்து வரும் டிஜிட்டல் வருவாய் ஈட்டும்திறனைத் தெளிவாகக் காட்டுகிறது.
பிசிசிஐ-யின் நான்கு துணை ஸ்பான்சர் இடங்கள் (My11Circle, AngelOne, RuPay, CEAT) ₹1,485 கோடிக்கு விற்பனையானதும், டாடா குழுமத்துடனான ₹2,500 கோடி (US$300 மில்லியன்) மதிப்புள்ள ஐந்து வருட டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்த நீட்டிப்பும் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்கள். 2025 மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் (₹27 கோடி), ஸ்ரேயாஸ் ஐயர் (₹26.75 கோடி) போன்ற வீரர்களுக்கு கிடைத்த பிரம்மாண்ட ஏலத் தொகையும் ஐபிஎல் சந்தை மதிப்பை உயர்த்த ஒரு காரணமாக அமைந்துள்ளது.
ஃபிரான்சைஸ்களில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) முதல் முறையாக லீக்கின் மிகவும் மதிப்புமிக்க அணியாக உருவெடுத்துள்ளது. அதன் மதிப்பு ₹2,259 கோடியாக (269 மில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது. முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதுடன், வலிமையான பிராண்ட் மற்றும் டிஜிட்டல் மையப்படுத்தப்பட்ட ரசிகர் ஈடுபாடு ஆகியவை ஆர்சிபி-யை ஐபிஎல் ஜாம்பவான்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ கடந்து முதல் இடத்திற்கு உயர்த்தி இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் ₹2,032 கோடியுடன் (242 மில்லியன் டாலர்கள்) இரண்டாம் இடத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), ஒரு மோசமான சீசனால் பாதிக்கப்பட்டு, ₹1,972 கோடியுடன் ($235 மில்லியன் டாலர்கள்) மூன்றாம் இடத்திற்கு சரிந்துள்ளது. இது ஒரு அணி களத்தில் எப்படி செயல்படுகிறது என்பது அதன் பிராண்ட் மதிப்பை எவ்வளவு பெரிய அளவில் பாதிக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
பிராண்ட் மதிப்பில் மிகப்பெரிய பாய்ச்சலை பதிவு செய்த அணி பஞ்சாப் கிங்ஸ் (PBKS). 2025 ஐபிஎல் தொடரில் இரண்டாம் இடம் பிடித்தது, புதிய தலைமை உத்தி, ஸ்ரேயாஸ் ஐயர் 'சர்பஞ்ச் சாப்' ஆகவும், ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராகவும் இணைந்து உருவாக்கிய ஆழமான கலாச்சார இணைப்பு ஆகியவை 39.6% ஆண்டு வளர்ச்சிக்குக் காரணமாய் அமைந்துள்ளன.
'சர்பஞ்ச் சாப்' போன்ற தனித்துவமான மற்றும் கலாச்சாரத்துடன் பிணைந்த மார்க்கெட்டிங் உத்திகள் ரசிகர்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்தி, பிராண்ட் மதிப்பை வியக்க வைக்கும் வகையில் உயர்த்த முடியும் என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிரூபித்துள்ளது.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜியோ சினிமாவில் 67.8 கோடி பார்வைகளைப் பெற்று புதிய டிஜிட்டல் சாதனைகளை படைத்துள்ளது. இது, ஐபிஎல் வெறும் கிரிக்கெட் போட்டியல்ல, அது ஒரு பிரம்மாண்டமான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வியாபார மாதிரி என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.