மும்பை: ஐபிஎல் அணிகளில் ஒவ்வொரு இளம் வீரர்களும் கேப்டனாக வேண்டும் என்று அடம் பிடித்து வருகின்றனர். தங்களுக்கு கேப்டன் பதவி வழங்க வேண்டும் என்று வெளிப்படையாக அணி நிர்வாகத்திடம் கோரிக்கையும் வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டனாக மாறுவதற்கு ஐபில் அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என கிரிக்கெட் வீரர் சந்தீப் ஷர்மா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் சந்தீப் சர்மா, இது குறித்து பேசி இருக்கிறார்.

அதில்," ஐபிஎல் அணியின் கேப்டனாக தனது அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் என்று கூறுவதெல்லாம் தவறான விவாதம் ஆகும். சூரியகுமார் யாதவை எடுத்துக் கொண்டால் அவர் எந்த ஐபில் அணியிலும் கேப்டனாக இல்லை. அவர் தற்போது நன்றாக செயல்படவில்லையா?"
"இந்திய அணியில் கேப்டனாக வேண்டுமென்றால் ஐபிஎல் அணிகளில் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. கடந்த மூன்று ஆண்டுகளாக ரோகித் சர்மா எந்த ஐபிஎல் அணியையும் வழிநடத்த வில்லை. ஆனால் அவர் கேப்டனாக இல்லையா? டி20 உலக கோப்பையை அவர் வென்று தரவில்லையா?"
"ஐபிஎல் தொடர் என்பது மிகவும் வித்தியாசமானது. அது உள்நாட்டு நடைபெறும் ஒரு கிரிக்கெட் தொடர் அவ்வளவுதான். எனவே ஐபிஎல் தொடரில் நாம் என்ன செய்கிறோமோ, அதை வைத்து தான் அணி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. இந்திய அணியின் பவுலர்கள் சில ஆண்டுகளாக சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்கள். பும்ரா குறித்து எதுவும் சொல்லிவிட முடியாது."
"ஆர்ஸ்தீப் சிங் இந்தியாவின் சிறந்த டி20 பவுலராக இருக்கின்றார். இதை போன்று ஹர்ஷித் ராணா ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுகிறார். எனவே இந்த மூன்று வீரர்களுக்குமே உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. இதேபோன்று ஹர்திக் பாண்டியாவும் அணியில் இருக்கின்றார். இதன் மூலம் அணியின் பேலன்ஸ் சிறப்பாக இருக்கின்றது. ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்கள் வீசினால் அது அணிக்கு பெரிய பலத்தை கொடுக்கும்."
"தேர்வு குழுவினர் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியாது. தேர்வு குழு என்பது ஒரு பணி.ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கொள்ள வைக்க வேண்டும் என்பது அவர்களுடைய பணி கிடையாது. பிரசித் கிருஷ்ணாவை ஒருவேளை அணியில் சேர்த்து இருந்தால் நிச்சயம் பலரும் அவருக்கு பதில் வேறு ஒரு நபரை சேர்த்து இருக்கலாம் என்று கூற தான் செய்வார்கள்."
"எனவே தேர்வு குழுவினர் ரசிகர்கள் என்ன சொல்வார்கள் என்பதெல்லாம் கேட்காமல் செயல்பட வேண்டும். என்னை பொறுத்தவரை ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பான அணியை தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதை நினைத்துக் கொண்டு அனைவரும் நிம்மதியாக இருக்க வேண்டும்"என்று சந்திப் ஷர்மா தெரிவித்துள்ளார்.