சென்னை: நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோத உள்ளன. ஏன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கூடுதலாக கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.
இந்தியன் ப்ரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடர் தான் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா. 15 ஆண்டுகளுக்கு முன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்ட போது, இந்த இடத்திற்கு ஐபிஎல் வரும் என்று சொல்லி இருந்தால் அனைவரும் சற்று கூடுதலாக சிரித்திருப்போம்.

ஆனால் இன்று ஒவ்வொரு நொடியும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வணிகமும், வீரர்கள் அளிக்கும் த்ரில்லும் உயர்ந்துகொண்டே செல்கிறது. மார்ச் மாதம் வந்துவிட்டாலே ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கும் என்று பேச்சுகள் யாரும் சொல்லாமலேயே வந்துவிடுகின்றன.
அந்த அளவிற்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஊடுருவிவிட்டது என்றே சொல்லலாம். 15 ஆண்டுகளுக்கு முன் நகரங்களில் வசிக்கும் விளையாட்டாக பார்க்கப்பட்டு வந்த ஐபிஎல் தொடரில், இன்று ஜம்மு - காஷ்மீரில் எங்கேயோ லெதர் பந்தில் பந்துவீசி வந்த வீரரும் இடம்பெற்றிருப்பது தான், கிரிக்கெட்டுக்கு கிடைத்த வெற்றி.
எங்கேயோ தள்ளுவண்டி இழுத்த சிராஜின் தந்தையும், சேலம் தெருக்களில் சிக்கன் கடை வைத்திருந்த தம்பதியினரின் மகனான நடராஜனும் ஐபிஎல் தொடர் மூலமாக நேரடியாக இந்திய அணிக்கு ஆடி இருக்குறார்கள். சாமானியர்கள் மத்தியில் கிரிக்கெட் இன்னும் செல்வாக்கு மிகுந்த விளையாட்டாக இருப்பதாக ஐபிஎல் தொடரும் மிக முக்கியக் காரணம்.

இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பலரும் கொல்கத்தா, குஜராத், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத் என்று விளையாடி வருகிறார்கள். இதுபோல் தான் ஜம்மு- காஷ்மீர், ஹைதராபாத், புனே, மொஹாலி என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களும் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடுகிறார்கள்.
நம் தெருக்களில், நம் ஊரில், நமது மைதானத்தில் எங்கோ விளையாடிய ஒரு இளைஞர் தான் இன்று ஐபிஎல் தொடர் வரை சென்றிருக்கிறார் என்ற பேச்சே அடுத்த தலைமுறையை கவர்ந்து வருகிறது. கைகளில் இருக்கும் பேட்டிற்கும், பந்துக்கும் உண்மையாக இருக்கும் பட்சத்தில், கிரிக்கெட்டின் உச்சிக்கு அனைவராலும் செல்ல முடியும் என்பதை ஐபிஎல் தொடர் மீண்டும் மீண்டும் நிரூபிக்க வருகிறது.
இதோ இன்னும் அடுத்த 2 மாதங்களுக்கு நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுக்கவும் கொண்டாட்டத்தை அதிகரிக்கவும் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. மாலை நேரம் வந்துவிட்டால் இனி எந்த பிரஷரும் இல்லாமல் கிரிக்கெட்டை திருவிழா போல் கொண்டாடி ரசிக்கலாம். சுமார் 2 மாதங்கள் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் போருக்கு தயாராகும் வீரர்களை போல் களம் காண தயாராகி வருகிறார்கள் நமது கிரிக்கெட் வீரர்கள். நமது கொண்டாட்டத்திற்கும், கோபத்திற்கும், உத்வேகத்திற்கும் ஐபிஎல் தொடரும் இன்னொரு காரணமாக இருக்கப் போகிறது.