சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி மகத்தான சாதனை ஒன்றை படைத்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையின் தத்து பிள்ளைக்கு சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தங்களுடைய சொந்த அணி விக்கெட் வீழ்ந்தால் மைதானத்தில் மயான அமைதி நிலவும்.
ஆனால் இன்று ஒவ்வொரு முறையும் விக்கெட்டுகள் வீழ்ந்த உடன் சிஎஸ்கே ரசிகர்கள் தோனி தான் வரப்போகிறார் என நினைத்து உற்சாகமாக குரல் எழுப்பினர். ஆனால் ஒவ்வொரு முறையும் வேறு வீரர்கள் வந்த உடன் ஏமாற்றம் கிடைத்தது.

இதனால், இன்று தேல தரிசனம் கிடைக்காது என ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு கடைசியாக தோனி கைளத்திற்கு வந்து தவம் கிடக்கும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் கடவுள் போல் மைதானத்திற்கு வந்தார். அப்போது, சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த சத்தத்தின் டெசிபல்ஸ் அபாயகரமான அளவை தாண்டியது.
மகிழ்மதிக்கு பாகுபலி வரும் போது எடுக்கப்பட்ட காட்சி எல்லாம், இந்தகாட்சிக்கு முன் தோற்று போக வேண்டும். திடீரன்று சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள், தங்களுடைய செல்போனின் பிளாஷ் லைட் அடித்து தோனிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

எப்படி மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நமது இளைஞர்கள் பிளாஷ் லைட்டை காண்பித்தார்களோ, அதனை இன்று தோனிக்காக ரசிகர்கள் செய்து காட்டினர். தோனி களத்தில் இருந்த 3 பந்துகளில் 2 இமாலய சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை தோனி கடந்தார். இந்த மைல்கல்லை எட்டிய வயதான வீரர் என்ற பெருமையும் தோனிக்கு கிடைத்தது.