பெங்களூரு : ஐபிஎல் தொடரில் Southern Derby என்று அழைப்படும், சிஎஸ்கே, பெங்களூரு அணிகள் மோதும் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அந்தப் போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல், போலீஸ் தடியடியே நடந்தது என்றால், எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்று பார்த்து கொள்ளுங்கள்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு சிஎஸ்கே அணி, முதல் முறையாக பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வந்துள்ளது. சிஎஸ்கே அணி அடுத்த 6 போட்டிகளில் 4 போட்டிகளை வெளியூரில் தான் விளையாட உள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை சிஎஸ்கே பெற வேண்டும்.

சிஎஸ்கே, ஆர்சிபி அணி இதுவரை 30 முறை மோதி இருக்கின்றன. இதில் 19 முறை சிஎஸ்கேவும், 10 முறை பெங்களூருவும், ஒரு ஆட்டம் மழையால் ரத்தும் ஆகி இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற 6 போட்டிகளில் சிஎஸ்கே 4 முறையும், ஆர்சிபி 2 முறையும் வென்று இருக்கிறது. இந்த நிலையில் ஆர்சிபி அணியின் இஞ்சினாக கோலி இருக்கிறார்.
ஆனால், கோலிக்கு ஒரு பெரிய மைனஸ் பாயிண்ட் தற்போது இருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர்களை மிரட்டும், கோலி, ஸ்பின்னர்கள் வந்தாலே பொட்டி பாம்பாக அடங்கி விடுகிறார். அதிலும்,ஜடேஜாவின் 131 பந்துகளை எதிர்கொண்ட கோலி 140 ரன்கள் மட்டும் தான் அடித்திருக்கிறார். இதில் 3 முறை ஆட்டமிழந்து இருக்கிறார்.
இதே போன்று ஆர்சிபியின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் ஜடேஜாவை 40 பந்துகளில் எதிர்கொண்டு 49 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 6 முறை மேக்ஸ்வெல் ஆட்டமிழந்து இருக்கிறார். இந்த மைனஸ் பாயிண்ட்களை வைத்து, ஸ்பின்னர்களை ஆரம்பத்திலேயே தோனி பயன்படுத்தி நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.