விசாகப்பட்டினம் : டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனை சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி படைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட் தொடக்கம் முதல் இப்போது வரை சில வீரர்கள் தான் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். குறிப்பாக ஐபிஎல் தொடரின் முதல் சீசன் முதல் நடப்பு சீசன் வரை 5 வீரர்கள் தான் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்கள். அதில் முக்கியமான வீரர் மகேந்திர சிங் தோனி. இதுவரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக 5 கோப்பைகளை வென்றுள்ள அவர், 17 சீசன்களில் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பேட்டிங்கை செய்து வரும் டெல்லி அணிக்கு பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியில் பொளந்து கட்டினர். பவர் பிளேவின் முதல் 4 ஓவர்களில் சிஎஸ்கே பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்து 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தனர்.
ஆனால் கடைசி 2 ஓவர்களில் மட்டும் 38 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்களை குவித்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 32 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இவர் முஷ்தாஃபிசுர் ரஹ்மான் பவுலிங்கில் ரிவர்ஸ் லேப் ஷாட் அடிக்க, அதனை பதிரனா ஒற்றை கைகளால் தாவி பிடித்து அசத்தினார்.
இதனால் அவர் 52 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரில் ஜடேஜா அட்டாக்கில் வந்தார். அந்த ஓவரின் 4வது பந்தில் ஜடேஜா வீசிய பந்தில் பிரித்வி ஷா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா கூடுதல் வேகத்துடன் வீசிய பந்து பிரித்வி ஷா பேட்டில் பட்டு எட்ஜாக, அதனை தோனி லாவகமாக பிடித்து அசத்தினார். கடினமான கேட்சை 42 வயதிலும் சிறப்பாக தோனி பிடித்தது ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கேட்ச் மூலம் தோனி மெகா சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் ஸ்டம்பிங், ரன் அவுட் மற்றும் கேட்ச் மூலம் விக்கெட் கீப்பராக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் 274 விக்கெட்டுகளுடன் 2வது இடத்திலும், 270 விக்கெட்டுகளுடன் டி காக் 3வது இடத்திலும், 209 விக்கெட்டுகளுடன் பட்லர் 4வது இடத்திலும் உள்ளனர். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் தோனியின் சாதனையை கொண்டாடி வருகின்றனர்.