டெல்லி : ஐபிஎல் லீக் தொடரில் இன்றைய முக்கிய ஆட்டத்தில் டெல்லி அணியும், குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. டெல்லி அணி, தங்களது முதல் போட்டியில் அருண் ஜெட்லி மைதானத்தில் விளையாடுகிறது. இரு அணிகளும் கடந்த சீசனில் ஒரு முறை மோதியுள்ளது. இதில் குஜராத் அணியே வெற்றி பெற்றது.
டெல்லி மைதானம் எப்போதுமே ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் தான். காரணம் ஒரு முனையில் பவுண்டரிகள் எல்லைகள் தூரம் மிகவும் குறைவு என்பதால் ஆறாவது படிக்கும் மாணவன் கூட இங்கு சிக்சர் அடிக்கலாம். அப்படி இருக்க, டேவிட் வார்னர், ஹர்திக் பாண்டியா எல்லாம் பொளந்து விட மாட்டார்களா?

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக தெரிவித்துள்ளார். ஆடுகளம் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாததால், இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். மேலும் வில்லியம்சன் இல்லாதது பெரிய இழப்பு தான் என்று குறிப்பிட்ட ஹர்திக், ஆனால் போட்டி நடந்து தானே ஆக வேண்டும் என்று கூறினார்.
மேலும் வில்லியம்சனுக்கு பதிலாக அதிரடி வீரர் டேவிட் மில்லர் வந்துள்ளதாக குறிப்பிட்ட ஹர்திக், கடந்த முறை எங்களுக்காக பல போட்டியை மில்லர் வென்று தந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய வார்னர், பந்துவீச்சிலும், ஃபில்டிங்கிலும், பேட்டிங்கிலும் நன்றாக செயல்பட வேண்டும் என்பதே தங்களுடைய பிளான் என்று கூறினார்.
இன்றைய ஆட்டத்தில் ரோமன் போவெல் நீக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்ட வார்னர், இது போன்ற தொடர்களில் இது மாதிரி கடினமான முடிவை எடுக்க வேண்டியது இருப்பதாக வார்னர் கூறியுள்ளார். இன்றைய ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக அபிஷேக் போரேல் சேர்க்கப்பட்டுள்ளதால், சர்பிராஸ் கான் சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடுகிறார்.