டெல்லி: ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது தகுதிச் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது ஹைதராபாத்.
டெல்லியில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்று போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தவான் 10 ரன்னிலும், வார்னர் 28 ரன்னிலும் அவுட் ஆனார்கள். ஹென்றிக்ஸ் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன்பின்னர் வந்த யுவராஜ் சிங் 30 பந்தில் 44 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். 9-வது வீரராக களம் இறங்கிய பிபுல் ஷர்மா அதிரடியாக 5 பந்தில் 14 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், மோர்கல், ஹோல்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணியில் மணிஷ் பாண்டே அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் காம்பீர் 28, முன்ரே 16 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ரன் எடுக்க தவறினர். புவனேஸ் குமார் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
ஹைதராபத் அணியில் 2 விக்கெட்டுக்களையும், 31 ரன்களையும் எடுத்த ஹென்ரிகியூஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தோல்வியின் மூலம் தொடரில் இருந்து கொல்கத்தா அணி வெளியேறியுள்ளது. ஹைதராபாத் அணி வெள்ளிக்கிழமை நடைபெறும் தகுதிச் சுற்று 2 வது ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது.
அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி மே 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.