ஐபிஎல்லை நடத்துறது நாம.. ஆனால் அதை வச்சு 'கப்பு' வாங்குனது இவங்க...!
கொழும்பு: ஐபிஎல் போட்டிகள்தான் எங்களுக்கு நல்ல பயிற்சிக்களமாக அமைந்தது. அந்த அனுபவம்தான் எங்களுக்கு டுவென்டி 20 உலகக் கோப்பையை வெல்ல உதவியாக இருந்தது என்று இலங்கை கேப்டன் லசித் மலிங்கா கூறியுள்ளார்.
கொழும்பு வந்து சேர்ந்த உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் இலங்கை வீரர்கள் பேசினர்.
கேப்டன் மலிங்கா பேசுகையில், உலகக் கோப்பயை வெல்ல தனக்கு ஐபிஎல் அனுபவம் பேருதவி புரிந்ததாக குறிப்பிட்டார். மலிங்காவின் பேட்டியிலிருந்து...

நல்ல அனுபவம்
கடந்த 6 ஆண்டுகளாக ஐபிஎல்லில் ஆடி வருவது எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது. அது எனக்கு உதவியுள்ளது.

கடைசி 4 ஓவர்களில் இந்தியா தடுமாற்றம்
இந்தியா பேட்டிங் செய்தபோது கடைசி 4 ஓவர்களில் இந்திய வீரர்கள் ரன் எடுக்க முடியமல் தடுமாறினர். இதுவே எங்களுக்கு சாதகமாக அமைந்தது.

ஐபிஎல்லில் கற்றது உதவியது
ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதன் மூலம் யாரை முதலில் பேட் செய்ய வைக்க வேண்டும், யாரை முதலில் பவுலிங் செய்ய வைக்க வேண்டும் என்பதை நான் நன்கு கற்றுக் கொண்டேன். அது உதவியது.

திட்டமிட்டு ஆடினோம்
இறுதிப் போட்டியில் எப்படி ஆடுவது என்பது குறித்து நானும் மூத்த வீரர்கள் சங்கக்கரா, ஜெயவர்த்தனே உள்ளிட்டோர் கூடி விவாதித்து முடிவு செய்தோம். அதன்படி ஆடினோம் என்றார் அவர்.

மும்பை இந்தியன்ஸ் வீரர்
மலிங்கா ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடி வருகிறார்.

இலங்கையர்களால் விமர்சிக்கப்பட்டவர்
முன்பு ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதற்காக சொந்த நாட்டுக்கு ஆடுவதையே தியாகம் செய்தவர், சுயநலக்காரர் என்று இலங்கையர்களால் விமர்சிக்கப்பட்டவர் மலிங்கா என்பது நினைவிருக்கலாம்.
எப்படியோ.. விருந்து வைப்பது ஒருத்தன், விரல் சூப்புவது இன்னொருத்தன் என்ற கதையாகி விட்டது.


Click it and Unblock the Notifications