அகமதாபாத் : ஐபிஎல் 2023 ஆம் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நாளை பல பரிட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்காக சிஎஸ்கே அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
குஜராத் அணியினரை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை தான் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்றதால், அவர்கள் ஓய்வில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இறுதி போட்டியில் யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

எந்த அணிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது என்பதை தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே வீரராக தோனிக்கு இது பத்தாவது இறுதிப் போட்டியாகும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் இது 11-வது பைனல் ஆகும். இதில் தோனி வெறும் நான்கு முறை மட்டுமே வென்றிருக்கிறார். ஹர்திக் பாண்டியாவிற்கு இதுவரை ஐந்து முறை இறுதிப் போட்டியில் விளையாடிருக்கிறார்.
இதில் அனைத்திலும் ஹர்திக் வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் இதுவரை தோல்வியே சந்திக்காத வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றிருக்கிறார். இந்த ரெக்கார்ட் நாளையும் தொடருமா இல்லை தோனி அதை முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதேபோன்று அகமதாபாத்தில் இதுவரை சிஎஸ்கே அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் அனைத்திலும் சிஎஸ்கே தோல்வியை தழுவி இருக்கிறது. இதனால் அகமதாபாத் சிஎஸ்கேவுக்கு மோசமான மைதானமாக அமைந்திருக்கிறது. இதேபோன்று குஜராத் அணியை பொறுத்தவரை இங்கு ஒன்பது போட்டிகளில் விளையாடி ஆறுமுறை வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
நாளைய ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற மும்பை இந்தியன்ஸ் சாதனை சமன் செய்து விடும். குஜராத் அணியை பொறுத்தவரை சிஎஸ்கே மும்பைக்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை கோப்பையில் வென்ற அணி என்ற பெருமையை படைக்க தீவிரமாக இருக்கிறார்கள் .நடப்பு சீசனில் எட்டு முறை அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணி ஐந்து முறை வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.