அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிராக சென்னை அணி விளையாடிய 4 போட்டிகளிலும் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசி அசத்தியுள்ளது சிஎஸ்கே ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடவுள்ளது. வலிமையான குஜராத் அணியை சிஎஸ்கே வீரர்களால் சமாளிக்க முடியுமா என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் சுப்மன் கில் பேட்டிங் ஃபார்ம், முகமது ஷமி மற்றும் ரஷித் கான் அசாத்திய பவுலிங் அனைவரையும் மிரள வைத்துள்ளது.

இவர்களை எதிர்த்து சிஎஸ்கே வீரர்கள் எப்படி கோப்பையை வெல்வார்கள் என்ற ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்த புலம்பலுக்கு ஆறுதலாக அமைந்துள்ளார் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட். இதுவரை குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 3ல் தோல்வியும், ஒன்றில் மட்டும் சென்னை அணி வென்றுள்ளது. ஆனால் இந்த 4 போட்டிகளில் சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.
நடப்பு சீசனில் குஜராத் அணிக்கு எதிரான 92 ரன்கள் சேர்த்த அவர், குவாலிஃபையர் முதல் போட்டியில் 60 ரன்களை விளாசி அசத்தினார். மொத்தமாக குஜராத் அணிக்கு எதிராக மட்டும் 69.5 சராசரியுடனும், 145.55 ஸ்ட்ரைக் ரேட் உடனும் ருதுராஜ் கெய்க்வாட் 278 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். இதனால் இன்று நடக்கும் இறுதிப்போட்டியிலும் ருதுராஜ் கெய்க்வாட் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் 14 இன்னிங்ஸில் விளையாடி 4 அரைசதங்கள் உட்பட 564 ரன்களை குவித்து அபாரமான ஃபார்மில் உள்ளார். இதனால் முகமது ஷமிக்கு எதிரான பவர்பிளே ஓவர்களில் ருதுராஜ் கெய்க்வாட் ஆதிக்கம் செலுத்தினால் சென்னை அணியால் எளிதாக பெரிய இலக்கையும் நிர்ணயிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.