ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கேவும் குஜராத் அணியும் மோத இருந்தது. இந்த நிலையில் அகமதாபாத்தில் யாருமே எதிர்பாராத வகையில் மழை வெளுத்து வாங்குகிறது.
இதனால் 7 மணிக்கு போட வேண்டிய டாஸ் இன்னும் வீசாமல் இருக்கிறது. மழை நின்று நின்று கண்ணாமூச்சி காட்டுகிறது. இதனால் ஆடுகளம் தார்பாயால் மூடப்பட்டு இருக்கிறது.

மழை மீண்டும் வருவதால் போட்டி இன்று நடத்தப்படுமா என தெரியவில்லை. இந்த நிலையில் 9:35 வரை போட்டி தொடங்கவில்லை என்றால் அதன் பிறகு ஓவர்கள் குறைக்கப்படும். இரவு 12.06 மணிக்கு போட்டி தொடங்கப்பட்டால், 5 ஓவராக ஆட்டம் மாற்றப்படும். போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் திங்கட்கிழமை ரிசர்வ் டேவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் மழை நின்ற பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கினால் டாஸ் வென்ற பிறகு கேப்டன்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். மழை மீண்டும் மீண்டும் குறுக்கிடுவதால் டாஸ் வென்றால் முதலில் பந்து வீசுவது சிறந்த முடிவாக இருக்கும். ஏனென்றால் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது டக்வொர்த் லூயிஸ் விதி விளையாடலாம்.
இதனால் நாம் எந்த இலக்கை துரத்த போகிறோம் என்பது முன்கூட்டியே இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு தெரிந்து விடும். ஒருவேளை மழை மீண்டும் குறிக்கிடாது மழை மேகங்கள் அகமதாபாத்தை நெருங்க வாய்ப்பே இல்லை என்று ரேடார் மூலம் நாம் தெரிந்து கொண்டு, ஆட்டம் 20 ஓவராக இருந்தால் முதலில் பேட்டிங் செய்வது நல்லது.
ஏனென்றால் ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கும். இதனால் பந்துவீச்சாளர்களால் சரிவர பந்துகளை வீச முடியாது. இதனை பயன்படுத்திக் கொண்டு பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க பார்ப்பார்கள். மும்பை குஜராத் அணிகள் மோதிய ஆட்டத்தில் கூட இந்த சிக்கல்தான் எழுந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் மிகப்பெரிய பங்கை ஏற்படுத்தும்.