அகமதாபாத்: குஜராத் - சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக இன்று ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மழை மற்றும் ரசிகர்கள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகிய சுவாரஸ்யமான மீம்ஸை பார்க்கலாம்.

அகமதாபாத்தில் தொடர்ந்து மழை பெய்ததால், குஜராத் - சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் போட்டியை நேரில் காண வரும் ரசிகர்கள், டிக்கெட்டுகளை பத்திரமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதனை லாட்டரி சீட்டை வீசிவிட்டு தேடும் கவுண்டமணி புகைப்படத்துடன், "டிக்கெட்ஸ் பத்திரமா இருக்கில்ல? தோனி பாய் வந்தா பறக்கவிட எல்லாத்தையும் கிழிச்சு பேக்ல போட்டு வச்சுருக்கேன்.. ஏன்?" என்று கேட்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

நேற்று 4 மணி நேரத்திற்கு மேலாகவும் கனமழை காரணமாக ஆட்டம் தொடங்கப்படவில்லை. இதனை கோவை பிரதர்ஸ் படத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் வரும் வடிவேலுவாக தோனியையும், அல்வா சீனுவாக ஜடேஜாவையும் மாற்றி ஒரு மீம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் திடீரென கிளம்பும் ஜடேஜாவை பார்த்து தோனி, "டேய் எங்கடா போற? என்றும், அதற்கு ஜடேஜா, தல இங்க பக்கத்துலதான் என்னோட வீடு.. நான் போய் சாப்பிட்டு வரேன்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ரியல் ஃபன்.

நேற்று மழை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை அணியின் ராயுடு ஓய்வை அறிவித்தார். இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் விக்ரம் படத்தில் கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து ஃபகத் ஃபாசில், "Big Fan of Your Work" என்று சொல்லுவார். அதனை அப்படியே மாற்றி மும்பை மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் ராயுடுவை பார்த்து, "Big Fan of Your Work" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ்.

நேற்று அகமதாபாத் மைதானத்தில் மழை தொடங்கிய போது, குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா மழையில் நனைந்தபடி விளையாடி கொண்டிருந்தார். இதனை சிறுத்தை படத்தில் வரும் மயில்சாமி, "அடடா மழை டா.. அட மழைடா" என்று பாடுவதை நெஹ்ரா பாடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

ராயுடு ஓய்வை அறிவித்த பின்னர் சென்னை மற்றும் மும்பை அணியின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராயுடுவை சிஎஸ்கே ரசிகர்கள் செல்லமாக பாகுபலி என்று அழைத்து வந்தனர். இந்த நிலையில் பாகுபலி 1 படத்தில் வரும் சிலை நிறுத்தும் காட்சியில் கீழே விழுந்த முதியவரை தூக்கிவிடும் பிரபாஸ் காட்சியோடு ஒப்பிட்டு, எப்போதெல்லாம் ரசிகர்கள் நம்பிக்கை இழக்கிறார்களோ.. அப்போது காப்பாற்றும் பாகுபலியாக ராயுடு இருப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.