
சென்னை - ராஜஸ்தானுக்குத் தடை
சில மாதங்களுக்கு முன்பு, உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட் ஆர். எம். லோதா கமிட்டி, மேட்ச் பிக்ங்ஸிங் விவகாரம் தொடர்பான தீர்ப்பை அளித்தபோது, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு வாழ்நாள் தடையும் விதித்து உத்தரவிட்டனர் என்பது நி்னைவிருக்கலாம்.

தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
இந்தத் தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மனு செய்துள்ளது. ஆனால் தடை உத்தரவுக்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2 வருடத்திற்கு மட்டும் புது அணிகள்
இந்த நிலையில்தான் சென்னை, ராஜஸ்தானுக்குப் பதிலாக 2 வருட காலத்துக்கு புதிதாக 2 அணிகளைத் தேர்வு செய்ய ஐபிஎல் நி்ர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

2 பரிந்துரைகள்
கொல்கத்தாவில் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தின்போது 2 முக்கிய பரிந்துரைகளை கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

இப்படிச் செய்யலாம்
அதாவது, 2 வருட காலத்திற்கு தற்காலிகமாக 2 அணிகளைத் தேர்வு செய்து அடுத்த 2 ஆண்டுகளுக்கான தொடரை நடத்துவது என்பது ஒரு முடிவாகும்.

இல்லாவிட்டால் இப்படிச் செய்யலாம்
இன்னொரு முடிவு என்னவென்றால், புதிதாக தேர்வு செய்யும் 2 அணிகளை பத்து வருட காலத்திற்கு விளையாட அனுமதிப்பது, போட்டித் தொடரையும் 10 அணிகள் கொண்டதாக மாற்றுவது என்பது.

2வது திட்டத்திற்கு வாய்ப்பு அதிகம்
இந்த 2வது திட்டத்தை தடை முடிந்து சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் திரும்பி வரும் ஆண்டான 2018 முதல் அமல்படுத்துவது எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். இந்தப் பரிந்துரைகளை கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு இன்று பரிசீலிக்கவுள்ளது. ஆனால் தற்காலிகமாக 2 அணிகளைத் தேர்வு செய்வது என்பது கடினமாக இருக்கும் என்று தெரிகிறது. எனவே 10 அணி கொண்ட பார்மட்டுக்கு கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காசு மேல காசு வந்து கொட்டுமே
மேலும் தற்போது 8 அணிகளாக உள்ளதை 10 அணிகளாக மாற்றும்போது வருமானமும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் அந்த முடிவுக்கே கிரிக்கெட் வாரியம் வரும் என்றும் கருதப்படுகிறது.

சர்ச்சை நாயகனும் வருகிறார்
கிரிக்கெட் வாரியக் கூட்டத்தில் சர்ச்சை நாயகன் என்.சீனிவாசனும் கலந்து கொள்ளவுள்ளா். இவர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதியாக கலந்து கொள்வாராம். ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்டால் இவரை சுப்ரீம் கோர்ட் கடுமையாக திட்டித் தீர்க்கும் என்பதால் சீனிவாசன் வருகை குறித்து கேள்விக்குறி நிலவுகிறது.


Click it and Unblock the Notifications