மீண்டும் ஐபிஎல் அலுவலகங்களில் ரெய்டு நடத்த வருமான வரித்துறை முடிவு
டெல்லி: வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் ஐபிஎல் அணிகளின் அலுவலகங்களில் ரெய்டு நடத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 15-ந்தேதி மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகம் மற்றும் ஐ.பி.எல். தலைமை அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தினார்கள்.
அதன் பின்னர் 8 ஐ.பி.எல். அணி உரிமையாளர்களின் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை வேட்டை நடத்தப்பட்டது. அப்போது ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த ஆவணங்களை கடந்த ஒரு வாரமாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். அதில் ஐ.பி.எல். அணிகள் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது தவிர ஐ.பி.எல். அணிகள் முறைப்படி உரிய வகையில் தங்கள் வருவாய்க்கு வரி கட்டவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வரி ஏய்ப்பு குறித்து விளக்கம் அளிக்கும்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்தை கவனிக்கும் கேம் பிளான் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதில் விளக்கம் அளிக்கும்படி இந்த நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஐ.பி.எல். அணி நிர்வாகங்கள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இன்னமும் சில சந்தேகங்கள் நீடிக்கிறது. எனவே மீண்டும் ஐ.பி.எல். அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த ரெய்டின்போது ஐபிஎல் ஊழல் குறித்த மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications