
பரிதாப மல்லையா
மதுபான தொழில் அதிபர், விஜய் மல்லையா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளராகும். குட்டித் தீவுகளையே விலைக்கு வாங்கும் அளவுக்கு கொடிகட்டி பறந்த விஜய் மல்லையா மதிப்பு, பாதாளத்துக்கு பாய்ந்து, இப்போது பல வங்கிகளில் பல கோடி கடனாளியாக பரிதாபமாக காட்சியளிக்கிறார். ஏர்லைன்சை இழந்தா். அணியை விற்கவும் முயன்று வருகிறார்.

கைதான உரிமையாளர்
இப்படித்தான் டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில், ஹைதராபாத் அணியை உருவாக்கினார், டெக்கான் கிரானிக்கள் அதிபரான வெங்கட்ராம் ரெட்டி. ஆனால் 2011லிருந்து வங்கிகளின் நிதி மோசடி வழக்குகளால் சிக்கி கைதாகி, தனது அணியை விற்பனை செய்யும் நிலை அவருக்கு வந்தது. விடாது கருப்பாய், கேஸ்கள் தொடருகின்றன.

சிக்கிய சன்நெட்வொர்க்
வெங்கட்ராம் ரெட்டி விற்ற ஹைதராபாத் அணியை வாங்கியது கலாநிதி மாறன் நிறுவனம். ஆனால், அவர்களையும் பொல்லாத ராசி விடவில்லை. எத்தனையோ பேரின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய சன் நெட்வொர்க் நிறுவனம் தற்போது, லைசென்ஸ் அனுமதி கூட கிடைக்காமல் திணறுகிறது. கலாநிதி மாறன் தம்பி, தயாநிதி மாறன் மீதான டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கு தற்போது இறுக்கமடையத் தொடங்கியுள்ளது. வாங்கிய ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தையும் மறுபடியும் விற்றுவிட்டார்கள்.

காதலும் கசந்தது
புனே வாரியர்ஸ் என்று தொடங்கப்பட்ட அணியின் உரிமையாளராக இருந்தவர் தொழிலதிபர் சுப்ரதா ராய். இவரும் மோசடி புகார்களால் கைது செய்யப்பட்ட நிலையில், புனே அணியே இல்லாமல் போய்விட்டது. பஞ்சாப் பணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தாவுக்கும், நீஸ் வாடியாவுக்கும் இருந்த காதல் வாழ்க்கையே கசந்து போய், போலீஸ் புகார்வரை சென்றது.

விசில்போட முடியலை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருந்த சீனிவாசனின் பிசிசிஐ தலைவர் பதவி பறிபோய், கோர்ட் கேஸில் சிக்கினார். அவரது மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு, கிரிக்கெட் பக்கமே போக கூடாது என்று ஆயுள் கால தடை விதிக்கப்பட்டுவிட்டது.

ராஜஸ்தான் ராஜ்குந்த்ரா
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சக உரிமையாளராக இருந்த ராஜ்குந்த்ராவும் பெட்டிங்கில் சிக்கி, கிரிக்கெட் பக்கம் போக ஆயுள் கால தடைக்கு உள்ளாகியுள்ளார். உரிமையாளர் ஷில்பா ஷெட்டி, தனது அணியை விற்க ஆள் தேடிக்கொண்டுள்ளார். அவர் மீதும் ராஜஸ்தான் அணி நிதி பரிவர்த்தனை தொடர்பான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

உயிரே போச்சு
இந்த உரிமையாளர்கள் பட்ட துன்பத்தைவிட ஒரு படி மேலே போய் பாதிக்கப்பட்டது கொச்சி உரிமையாளரான சுனந்தா புஷ்கர்தான். அவர் தனது உயிரையை பறிகொடுத்தார். கணவர் சசிதரூர் அமைச்சர் பதவியை இழந்ததோடு, மனைவி இறந்தது தொடர்பான சிக்கலில் மாட்டியுள்ளார். புஷ்கர் மரணமும் அதை தொடர்ந்த வழக்குகளும் சசிதரூருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

அணிகளே போச்சே
அங்கே கடித்து, இங்கே கடித்து, ஆளையும் கடித்த கதைபோல, உரிமையாளர்களுக்கு மட்டுமே ஐபிஎல் பாதகம் விளைவிக்கவில்லை. அணிகளையே தூக்கி ஸ்வாகா செய்துவிட்டது. ஆம். சிறப்பாக ஆடி வந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள், ஐபிஎல் போட்டிகளில் ஆட 2 வருட தடைக்கு உள்ளாகியுள்ளன.

தப்பி பிழைத்தோர்
இந்த கெட்ட ராசியில் இருந்து இதுவரை தப்பிவருவது, மும்பை அணியின் உரிமையாளரான, தொழிலதிபர் அம்பானி, கொல்கத்தா அணி ஓனர் ஷாருக்கான், டெல்லி அணியின் ஜிஎம்ஆர் ஆகியோர்தான். அவர்களுக்கும் இப்போது உள்ளூர கிலி ஏற்பட்டுள்ளது. இதனால்தான் என்னவோ, பெங்களூர் அணியை வாங்கவிருந்த ஜிந்தால் இரும்பு நிறுவனம், தற்போது பின்வாங்குகிறது.

இப்படியும் இருக்கலாம்
ஐபிஎல் ராசி அப்படி உள்ளது என்று ஒரு தரப்பு நம்பினாலும், மற்றொரு தரப்போ, கொள்ளை, கொள்ளையாக சேர்ந்த, கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியாக ஐபிஎல் அணிகள் பயன்பட்டன. அப்படிப்பட்ட மோசடி பேர்வழிகள், சட்டத்தின் பிடியில் வரிசையாக மாட்டுகிறார்கள். இது சட்டத்தின் வெற்றிதானே தவிர, ராசிக்கும் இதற்கும் சம்ந்தம் இல்லை என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











