மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிக முக்கியமான ஆட்டமாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக சிஎஸ்கே அணி மும்பை சென்றுள்ளது. அப்போது மும்பை விமான நிலையத்தில் ஒரு இன்ப அதிர்ச்சியான சந்திப்பு நடைபெற்றது.
அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்தும், சிஎஸ்கே அணியின் முன்னாள் தொடக்க வீரர் முரளி விஜய்யும் விமான நிலையத்தில் சிஎஸ்கே வீரர்களை சந்தித்துக் கொண்டனர். அப்போது ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விஜய்யின் தொடக்க ஜோடியாக களமிறங்கி கலக்கிய மைக்கேல் ஹசி கட்டி அணைத்து நலம் விசாரித்தார். அப்போது தோனியை நேரில் பார்த்த ஸ்ரீகாந்த், தோனிக்கு ஒரு சல்யூட் வைத்து பாராட்டினார். அதன் பிறகு தோனியை கட்டி அணைத்து ஸ்ரீகாந்த் உன்னுடைய ஆட்டத்தை நான் கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டு பார்த்தேன்.
அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு ஷாட்டையும் அப்படி ரசித்தேன். கடவுள் உனக்கு அனைத்து ஆசீர்வாதத்தையும் கொடுக்க வேண்டும் என தலையில் கை வைத்து ஸ்ரீகாந்த் ஆசிர்வதித்தார். இதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட தோனி அவரை கட்டி அணைத்தார். தோனியின் கேப்டன்ஷிப்பையும் ஸ்ரீகாந்த் பாராட்டினார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதே ஸ்ரீகாந்த் தான் தேர்வுக்குழு தலைவராக இருந்தபோது தோனியை கேப்டன் பதவியை விட்டு நீக்க வேண்டும் என முடிவெடுத்தார். இந்திய அணி உலக கோப்பை 2011 ஆம் ஆண்டு தொடரை வென்ற பிறகு வரிசையாக வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது.
இதனால் ஸ்ரீகாந்த் தோனியை பதவியை விட்டு தூக்கி கம்பீரை கேப்டனாக நியமிக்க முடிவு எடுத்தார். ஆனால் இந்த முடிவுக்கு அப்போதைய பிசிசிஐ தலைவர் சீனிவாசன் தடை விதித்ததுடன் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேர்வுக்குழுவினரையும் தூக்கினார். தற்போது யாரை கேப்டன் பதவி விட்டு தூக்க ஸ்ரீகாந்த் நினைத்தாரோ அவரையே பாராட்டி ஸ்ரீகாந்த் ஆசிர்வாதம் செய்துள்ளார். வாழ்க்கை ஒரு வட்டம் என்று தளபதி விஜய் சும்மாவா சொன்னார்.