பெங்களூரு: ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில், இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியும், கேகேஆர் அணியும் மோதியது. இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் கேகேஆர் அணியே வென்றது.
இதனால் பதிலடி தர வேண்டிய முனைப்பில் பார்ட் டைம் கேப்டன் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி இருந்தது. ஆனால், நடந்தோ, வேறு கதை தான். 'கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 56 ரன்களும், நிதிஷ் ராணா 48 ரன்களும் விளாசினார்.

இதனையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி வீரர்கள் வழக்கம் போல் அதிரடியாக விளையாடினர். அந்த அணியின் பேட்ஸ்மேன்களை ரசிகர்கள் KGF என்று அழைக்கிறார்கள். அதில் இன்று கே என்ற கோலி மட்டும் தான் வெடித்தார்.
ஜி என்ற கிளேன் மேக்ஸ்வெல்லும். எஃப் என்கிற ஃபர்ஃப் டுபிளஸிஸ் புஸ்வானமாக மாறினர். கொல்கத்தா அணி சுழல் பந்துவீச்சாளர்கள் சுயஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தியை எதிர்கொள்ள முடியாமல் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் ஆர்சிபி அணி 6 ஓவர்கள் முடிவில் 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் ஒருபக்கம் அரணாக நின்று விராட் கோலி அதிரடியாக ஆடி வந்தார். விராட் கோலி 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி அடிக்கும் 5வது அரைசதம் இதுவாகும். ரஸ்ஸல் வீசிய 13வது ஓவரை அட்டாக் செய்ய நினைத்த கோலி, முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க முயன்றார். ஆனால் அந்த பந்து நேராக வெங்கடேஷ் ஐயர் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. இதனால் விராட் கோலி 37 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஆர்சிபி அணி ரசிகர்களுக்கு தோல்வி தங்கள் கண் முன்பு பிரேக் டான்ஸ் ஆடியது. லோம்ரர் 34 ரன்களும், டந்த சீசன் மட்டும் பினிஷராக இருந்து தற்போது சேது போல் விளையாடும் தினேஷ் கார்த்திக் 22 ரன்களில் ஆட்டமிழக்க, பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது