டெல்லி: ரெண்டஸ்வஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் குறித்த தெளிவான விவரங்களை தெரிவிக்காவிட்டால், ஐபிஎல் புதுவரவான கொச்சி அணி நீக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) எச்சரித்துள்ளது.
வரும் 2011ம் ஆண்டில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான 2 புதிய அணிகளை புனே மற்றும் கொச்சி நகரங்களை மையமாக வைத்து கடந்த மார்ச் மாதம் அறிவித்தது ஐபிஎல்.
இதில் புனே அணியை ரூ.1,702 கோடிக்கு சகாரா குழுமம் வாங்கியது. கொச்சி அணியை ரெண்டஸ்வஸ் என்ற விளையாட்டு நிறுவனம் ரூ.1533 கோடிக்கு ஏலம் எடுத்தது.
ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் வெளியுறவு துறை இணை அமைச்சர் சசிதரூருக்கு பங்கு இருப்பதாகவும், அவரின் வற்புறுத்தலின் பேரில் தான் கொச்சி அணியை உருவாக்குவதிலும் அதை ரெண்டவஸ் ஏலம் எடுக்க வேண்டும் என்பதிலும் அவர் ஆர்வம் காட்டினார் என்றும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
ரெண்டஸ்வஸ் நிறுவனத்தின் 25 சதவீத பங்குகள் மத்திய அமைச்சர் ஒருவருக்கும், முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஒருவருக்கும் சொந்தமானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கொச்சி அணியை வாங்கியிருக்கும் ரெண்டஸ்வஸ் பங்குதாரர்கள் குறித்து தெளிவான விவரங்களை பிசிசிஐ கேட்டுள்ளது.
அவ்வாறு விளக்கம் தராவிட்டால் கொச்சி அணியை நீக்க வேண்டியிருக்கும் எனவும் பிசிசிஐ எச்சரித்துள்ளது.