கொல்கத்தா: கங்குலி மற்றும் பந்து வீச்சாளர் ஜெயதேவ் ஆகியோரின் அபார ஆட்டம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
இந்த வெற்றியின் மூலம் அரை இறுதிக்கான வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டுள்ளது கொல்கத்தா.
முன்னதாக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில், முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 132 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வாட்சன் மட்டுமே சிறப்பாக ஆடினார். அபாரமாக ஆடிய அவரது ஆட்டத்தில் பந்துகள் பவுண்டரிகளுக்குப் பறந்தன. ஒரு சிக்சரையும் விளாசினார் வாட்சன்.
26 பந்துகளை மட்டுமே சந்தித்து 44 ரன்களைக் குவித்தார் வாட்சன். இருப்பினும் பின்னர் வந்தவர்கள் சரிவர ஆடவில்லை. பின்ச் மட்டும் 21 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். ராஜஸ்தான் அணியில் மொத்தம் நான்கு பேர் தான் இரட்டை இலக்கத்தைத் தாண்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஆட வந்த கொல்கத்தா அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான கங்குலி விளாசித் தள்ளி விட்டார். 50 பந்துகளைச் சந்தித்த அவர் 75 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 2 சிக்சர்கள், 11 பவண்டரிகள் அடக்கம்.
அதேபோல ரவி பூஜாரா 45 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். 16.1 ஓவர்களிலேயே கொல்கத்தா அணி 2 விக்கெட்களை மட்டும் இழந்து 133 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வியின் மூலம் ராஜஸ்தான் அணிக்கான அரை இறுதி வாய்ப்பு பறி போய் விட்டது. அதேசமயம், கொல்கத்தா அணியின் வாய்ப்பு சற்று உயிர்ப்புடன் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் ஒரு போட்டி பாக்கி உள்ளதால், அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பு உயிர்ப்புடனேயே உள்ளது.
12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் சென்னைக்கு அடுத்த இடத்தில் கொல்கத்தா தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.