மொஹாலி: ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தில், ரன் வெள்ளப் பெருக்கு எடுத்து ஓடியது. இன்றைய ஆட்டத்தில் 458 ரன்கள் அடிக்கப்பட்டது. மொஹாலியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
கடந்த போட்டியில் ஆமை வேகத்தில் விளையாடி விமர்சனத்தை பெற்ற லக்னோ அணி, இன்றைய ஆட்டத்தில் சலங்கையை கட்டி முழு சந்திரமுகியாக மாறி, பந்துவீச்சாளர்களை சுளுக்கு எடுத்தது. மெயர்ஸ், 24 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.

பவர்பிளேவில் லக்னோ அணி 74 ரன்கள் சேர்த்த நிலையில், மெயர்ஸ் பெவிலியன் திரும்பினார். . ஆயுஷ் பதோனி 24 பந்தில் 44 ரன்கள் எடுக்க, இதில் 3 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். மார்க்ஸ் ஸ்டோனிஸ், தன் பங்கிற்கு 5 சிக்சர்களையும், 6 பவுண்டரிகளையும் பறக்கவிட, 40 பந்தில் 72 ரன்கள் விளாசினார். இறுதியில், நிக்கோலஸ் பூரான்,19 பந்தில் 45 ரன்கள் விளாச, லக்னோ அணி 20 ஓவா முடிவில் 257 ரன்களுக்கு 5 விக்கெட்டுக இழந்தது. இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோராகும்.
258 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ஷிகர் தவான் 1 ரரன்னிலும், பிராப்சிம்ரன் சிங் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, 3வது வீரராக களமிறங்கிய அதர்வா டாடே 36 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்து பதிலடி கொடுத்தார். ஷிக்கந்தர் ராசாவும் 36 ரன்கள் எடுத்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க, இருவரும் முக்கிய கட்டத்தில் வெளியேறினர்.
இதனால் பஞ்சாப் அணியின் தோல்வி உறுதியானது. லிவிங்ஸ்டோன் 23 ரன்களிலும், சாம் கரண் 21 ரன்களிலும், ஜித்தேஷ் 24 ரன்களும் எடுத்து, பெரிய ஷாட் ஆட முற்பட்டு, தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் பஞ்சாப் அணி 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 புள்ளிகளுடன் லக்னோ அணி 2வது இடத்திற்கு முன்னேறியது.