டெல்லி: நாட்டை உலுக்கி வரும் ஐபிஎல் ஊழலின் ஒரு பகுதியாக 2வது ஐபிஎல் தொடரில் பல போட்டிகள் மேட்சி பிக்ஸிங் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தனது அறிக்கையில் கூறியுள்ளதாம். மேலும் 27 வீரர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம என்றும் கூறப்படுகிறது.ஆனால் இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் மேட்ச் பிக்ஸிங் குறித்து இப்போது விசாரிக்கவில்லை. நிதி வருவாய் மற்றும் முதலீடுகள் குறித்து மட்டுமே விசாரிக்கிறோம் என்று மட்டும் தெரிவித்தனர். மேட்ச்பிக்ஸிங்கில் 27 பேருக்குத் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது குறித்து வருமான வரித்துறையினர் கூற மறுத்து விட்டனர்.ஐபிஎல் ஊழலில் நாளுக்கு நாள் புதிது புதிதாக ஊழல் குறித்த தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன. பல முக்கியப் போட்டிகள் முன்கூட்டியே முடிவு நிர்ணயிக்கப்பட்டதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. குறிப்பாக தென் ஆப்பிரிக்காவில் நடந்த 2வது ஐபிஎல் தொடரில்தான் பெருமளவிலான போட்டிகள் பிக்ஸ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 27 வீரர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் வருமான வரித்துறை அரசிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால் இதுகுறித்து வருமான வரித்துறையினர் அளித்துள்ள விளக்கத்தில் மேட்ச் பிக்ஸிங் குறித்து நாங்கள் இப்போது விசாரித்துக் கொண்டிருக்கவில்லை. மாறாக நிதி முறைகேடுகள் உள்ளனவா என்பது குறித்து மட்டுமே விசாரித்து வருகிறோம் என்றனர்.அதேசமயம், 11 பக்கம் கொண்ட வருமான வரித்துறையின் ஒரு பக்கத்தில் மேட்ச் பிக்ஸிங் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளதாம். அதை எப்படி விசாரிக்க வேண்டும் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.மேலும் மோடிக்கு மிகவும் நெருக்கமான ஒருவர்தான் இந்த மேட்ச் பிக்ஸிங் வேலைகளின் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளதாம். ஆனால் அதற்கான ஆதாரம் இணைக்கப்படவில்லை.மேட்ச்பிக்ஸிங் நடந்துள்ளதாக கூறியுள்ள வருமான வரித்துறை, அது எந்தப் போட்டி, எப்போது என்பது குறித்து விளக்கவில்லை.எந்த வீரருக்கு சூதாட்டத்தில் தொடர்பு உள்ளது என்பது குறித்த பட்டியலை வருமான வரித்துறை பகிரங்கமாக வெளியிடவில்லை. அதேசமயம், டெண்டுல்கர், டிராவிட், கங்குலி ஆகிய முக்கிய வீரர்களுக்கு இதில் தொடர்பில்லை என்பதை மட்டும் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணி உள்ளிட்டோரின் பெயர்களை அது வெளியிடாததால், அவர்கள் உள்பட மற்ற அனைத்து வீரர்களுமே சந்தேக வளையத்திற்குள் தாங்களாகவே வந்து நிற்கின்றனர்.வருமான வரித்துறையின் இந்தப் புதிய தகவலால் ஐபிஎல் ஊழல் மேலும் பெரிதாகி வருகிறது. #13;