ஜெட்டா: இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான வில் ஜாக்ஸை ஆர்சிபி அணி ஆர்டிஎம் மூலம் ரீடெய்ன் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, மும்பை அணி அவரை ரூ.5.25 கோடி கொடுத்து வாங்கியது. இதன்பின் ஆர்சிபி அணி ஆர்டிஎம் பயன்படுத்தாததால், ஆகாஷ் அம்பானி எழுந்து சென்று கட்டிப்பிடித்து நன்றி கூறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஐபிஎல் தொடரில் நீண்ட காலமாக ஆர்சிபி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் நட்பு இருந்து வருகிறது. கடந்த சீசனின் போது ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்வதற்கு மும்பை அணிக்கு பணம் தேவைப்பட்ட போது, ஆர்சிபி அணியிடம் கேமரூன் க்ரீனை ரூ.17.5 கோடிக்கு விற்றது. எதற்காக ஆர்சிபி அணி கேமரூன் க்ரீனை வாங்கி மும்பை அணிக்கு உதவி செய்கிறது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

இந்த சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக களமிறங்கிய வில் ஜாக்ஸ், 8 போட்டிகளில் விளையாடி 230 ரன்களை விளாசி தள்ளினார். அதில் ரஷீத் கானை வெளுத்தது ஜாம்பவான் வீரரான விராட் கோலிக்கே ஆச்சரியம் கொடுத்தது. இதனால் ஆர்சிபி அணி வில் ஜாக்ஸை ரீடெய்ன் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரிலீஸ் செய்ததால், ஆர்டிஎம் மூலம் நிச்சயம் வாங்கும் என்று ரசிகர்கள் நம்பி இருந்தனர். ஏனென்றால் மேக்ஸ்வெல், டூ பிளசிஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு கூட ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தாமல் ஆர்சிபி அணி அமைதியாக இருந்தது. இதனால் பலரும் வில் ஜாக்ஸ்-க்காக ஆர்சிபி அணி பாதுகாத்து வைத்திருப்பதாகவே பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் வில் ஜாக்ஸ் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்ட பின், உடனடியாக மும்பை அணியின் பேடில் உயர்த்தப்பட்டது. இன்னொரு பக்கம் பஞ்சாப் அணியும் நேரடி போட்டியில் களமிறங்க, உடனடியாக அவரின் விலை ரூ.5 கோடிக்கு மேல் சென்றது. அப்போது மும்பை அணி வில் ஜாக்ஸை வாங்க ரூ.5.25 கோடி கொடுக்க முன் வந்ததால், பஞ்சாப் அணி விலகியது.
இதையடுத்து மும்பை அணி அவரை வாங்கினாலும், ஆர்சிபி அணியிடம் ஆர்டிஎம் இருந்தது. அப்போது ஆர்டிஎம் செய்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, ஆர்சிபி அணி விலையை கூட உயர்த்தி கூறவில்லை. ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தவில்லை என்று அறிவித்தது. இதனால் உற்சாகமடைந்த மும்பை அணி நிர்வாகிகள் ஆகாஷ் அம்பானிக்கு வாழ்த்து கூறினர்.
அதேபோல் ஆகாஷ் அம்பானியும் உற்சாகமடைந்து மற்றவர்களுக்கு வாழ்த்து கூறியதோடு, நேரடியாக ஆர்சிபி அணி நிர்வாகிகள் பக்கம் சென்று கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தார். இதனால் மெகா ஏலத்தில் கூட ஆர்சிபி அணியும், மும்பை அணியும் சொல்லி வைத்து பங்கேற்றுள்ளார்களா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.