ஜெட்டா: இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் வில் ஜாக்ஸ் விவகாரத்தில் ஆர்சிபி மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் சேர்த்து தில்லு முல்லு செய்ததாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மெகா ஏலத்தில் இரு அணிகளும் இணைந்து ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகவும் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகிறனர்.
ஆர்சிபி மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் நீண்ட காலமாகவே நட்புறவில் இருந்து வருகின்றன. அந்த நட்பு மெகா ஏலத்தின் போது மிகவும் வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. மெகா ஏலத்தின் போது ஆர்சிபி அணியின் டேபிளுக்கே சென்று, மும்பை அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தார்.

இதற்கு இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் வில் ஜாக்ஸை ஆர்சிபி அணி விட்டுக் கொடுத்ததே காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஆர்சிபி அணிக்காக கடந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடிய வில் ஜாக்ஸ், ஒரு சதம் உட்பட 230 ரன்களை விளாசி தள்ளினார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ரஷீத் கான், மோகித் சர்மா உள்ளிட்டோரின் பவுலிங்கை பொளந்து கட்டினார்.
இதனால் ஆர்சிபி அணி வில் ஜாக்ஸை மெகா ஏலத்தின் ஆர்டிஎம் மூலமாக மீண்டும் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத், லோம்ரோர், முகமது சிராஜ், கரண் சர்மா உள்ளிட்ட எந்த வீரருக்கும் ஆர்சிபி அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் வில் ஜாக்ஸ் பெயர் ஏலத்திற்கு வந்த போது, மும்பை மற்றும் பஞ்சாப் அணி நேருக்கு நேர் மோதின.
இறுதியாக மும்பை அணி ரூ.5.25 கோடிக்கு வில் ஜாக்ஸை வாங்க முயற்சித்த போது, ஆர்சிபி அணியிடம் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்துகிறீர்களா என்ற கேட்கப்பட்டது. அதற்கு ஆர்சிபி அணி நிர்வாகிகள், இல்லை என்று கைகளை நீட்டி மும்பை அணியை நோக்கி "தம்ஸ் அப்" காட்டினர். இதற்காக தான் ஆகாஷ் அம்பானி நேரடியாக வந்து கட்டிப்பிடித்து நன்றி கூறியுள்ளார்.
மும்பை போன்ற ஒரு அணி வில் ஜாக்ஸை வாங்க இவ்வளவு ஆர்வம் காட்டும் போதே, அவரால் என்ன செய்ய முடியும் என்பதை ரசிகர்கள் கணித்துவிடுவார்கள். ஆனால் ஆர்சிபி அணியை வழிநடத்தும் நிர்வாகிகள் எதற்காக வில் ஜாக்ஸை வாங்காமல் விட்டுக் கொடுத்தார்கள் என்பதே கேள்வியாக அமைந்துள்ளது. அதேபோல் மெகா ஏலத்தில் எதிரணியை முடிந்த அளவிற்கு பலவீனப்படுத்தவும் முயற்சிகள் செய்ய வேண்டும்.
ரிஷப் பண்ட், சாஹல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோரை வாங்கப் போவதில்லை என்றாலும், ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மிகச்சிறப்பாக விலையை ஏற்றிவிட்டு அவர்களின் பர்ஸை காலி செய்தார். இன்னொரு பக்கம் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளின் பர்ஸை காலி செய்ய டெல்லி அணி மிக தந்திரமாக செயல்பட்டது.
சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஃபிளம்மிங்கோ, முதல் நாளிலேயே அனைத்து வீரர்களுக்கும் பேடிலை தூக்கி மற்ற அணிகளை தூண்டிவிடும் முயற்சியை வெற்றிகரமாக செய்தார். ஆனால் வில் ஜாக்ஸ்-க்கு கூடுதல் விலையை கூட கேட்காமல் ஆர்சிபி அணி அப்படியே விட்டுக் கொடுத்திருக்கிறது. கடந்த சீசனிலேயே ஹர்திக் பாண்டியாவை வாங்க ஆர்சிபி அணி மறைமுகமாக உதவியது.
கேமரூன் க்ரீனை ஏலத்தில் விட்டிருந்தால் கூட ரூ.12 கோடிக்கு மேல் சென்றிருக்க மாட்டார். ஆனால் அவரை ரூ.17.5 கோடிக்கு ஆர்சிபி அணி வாங்கி, மும்பை அணியின் பர்ஸ் தொகையை அதிகரிக்க உதவியது. இதனால் மெகா ஏலத்தின் போது மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் இணைந்து கூட்டு வைத்து கொண்டு ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.